அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் அடிலெய்டில் நடைபெற உள்ள பகல் இரவு போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக முதலில் பார்க்கப்பட்டாலும், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் விளையாடப் போகும் வேகப் பந்துவீச்சாளரின் பெயரை பார்த்ததும் இந்திய ரசிகர்கள் பதற்றமாகி உள்ளனர்.

ஏனெனில், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய ஸ்காட் போலாண்ட் தான் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்று விளையாடப் போகிறார் என ஆஸ்திரேலிய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதுதான் இந்திய ரசிகர்களின் பதற்றத்துக்கு முக்கிய காரணம்.
ஸ்காட் போலாண்ட் 10 டெஸ்ட் போட்டிகளில் 19 இன்னிங்ஸ்களில் 35 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதில் இந்திய அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதில் ஒரு போட்டியில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. அவர் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய மற்றொரு போட்டி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகும்.
அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ஸ்காட் போலாண்ட் முக்கிய காரணமாக இருந்தார். அப்போது அவர் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் வீழ்த்தினார். அந்தப் போட்டியிலும் அவர் ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரராகவே விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே ஸ்காட் போலாண்ட் இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறார் என்ற தகவலை கேட்டதும் இந்திய ரசிகர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நினைவுகளுக்கு சென்று விட்டனர். அதே சமயம் ஸ்காட் போலாண்டுக்கு தற்போது 35 வயது ஆகிறது என்பதால் அவரால் அவரது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது.