துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா இந்திய அணியை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்ள உள்ளது. அதற்கு முன் அந்த அணியில் முக்கிய வியூகம் வகுக்கப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் துவக்க வீரர் மேத்யூ ஷார்ட் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் கூப்பர் கானோலி அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
கூப்பர் கானோலி சுழற் பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேன் என்பதால் இது இந்திய அணிக்கு எதிரான வியூகமாகவே பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி விதிப்படி தொடரின் இடையே 15 வீரர்கள் அடங்கிய உத்தேச அணியில் ஒரு வீரரை நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை 15 வீரர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றால் சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் அனுமதி பெற வேண்டும்.காயம் உள்ளிட்ட நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட்டின் பாதத்தில் காயம் ஏற்பட்டது. அவரால் சரியாக ஓட முடியவில்லை. அவர் மிகவும் தடுமாறி பேட்டிங் செய்து 20 ரன்கள் சேர்த்து இருந்தார். எனவே, காயம் அடைந்த ஷார்ட்டை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கூப்பர் கானோலி அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இந்த மாற்றத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.
மேத்யூ ஷார்ட்டின் காயத்தை ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிரான வியூகமாக பயன்படுத்தி இருப்பது தான் இதில் முக்கியமானது. ஆஸ்திரேலிய அணி தனது அரையிறுதிப் போட்டியை இந்திய அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் விளையாட உள்ளது. அந்த மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலேயே ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
இந்திய அணியில் நான்கு ஸ்பின்னர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணி பகுதி நேர ஸ்பின்னரான கூப்பர் கானோலியை தேர்வு செய்து இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே ஆடம் ஜம்பா மட்டுமே முழுநேர ஸ்பின்னராக இருக்கிறார்.
இந்த நிலையில் பகுதி நேர ஸ்பின்னர்களான கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மார்னஸ் லாபுஷேன் ஆகியோரும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். அவர்கள் சுழல் பந்து வீசக்கூடியவர்கள். அது ஆஸ்திரேலியா அணிக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இதன் மூலம் அந்த அணியின் பேட்டிங் வரிசையும் நீண்டதாக இருக்கும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள முதல் அரையிறுதி போட்டி நாளை மார்ச் 4 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாற்றத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியின் 15 வீரர்கள் கொண்ட அணி:
ஸ்டீவ் ஸ்மித் (c), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானோலி, பென் டுவார்ஷியஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஜம்பா.