துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன. இந்த போட்டிக்கான பிட்ச் சவாலாக மாறப்போவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணியில் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாய் மைதானத்தில் மூன்று போட்டிகளில் ஆடி உள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் வெவ்வேறு பிட்சுகள் பயன்படுத்தப்பட்டன. அவை மூன்றும் பந்துவீச்சுக்கு வெவ்வேறு விதங்களில் ஒத்துழைத்தன. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது பந்து ஸ்விங் ஆனது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

எனினும், அது இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இரண்டு அணிகளுமே அதிக அளவில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தின. அதற்கும் அந்த மைதானம் ஒத்துழைத்தது. சுழற் பந்துவீச்சாளர்களால் பந்தை திருப்ப முடியவில்லை என்றாலும், மெதுவாக வீசியபோது அது பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது அரையிறுதி போட்டிக்கான பிட்ச் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒரு பிட்ச் ஆகவே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அதில் நிறைய விரிசல்கள் இருப்பதாகவும் மைதான ஊழியர்கள் கூறி உள்ளனர். அப்படி என்றால் நிச்சயமாக வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த விரிசல்களின் மீது பந்து பிட்ச் ஆகும் வகையில் வீசினால் பந்து ஸ்விங் ஆக வாய்ப்பு உள்ளது. அதேபோல சுழற் பந்துவீச்சாளர்கள் அதை பயன்படுத்தினால் பந்து திரும்பவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியில் நான்கு ஸ்பின்னர்கள் மற்றும் ஒரு முழு நேர வேகப்பந்துவீச்சாளர் என்ற திட்டத்தை செயல்படுத்துவதா அல்லது மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற திட்டத்தை செயல்படுத்துவதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை துபாயில் குரூப் சுற்றில் இந்திய அணி ஆடிய மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆடினர்.
மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். இந்த இரண்டு திட்டத்தில் எதை செயல்படுத்துவது, பிட்ச் எந்த திட்டத்திற்கு ஒத்துழைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் அணித் தேர்வு குறித்து பேசுகையில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. எனவே, இந்திய அணியில் கடைசி நிமிட மாற்றங்கள் இருக்கக் கூடும்.
தற்போது துபாய் மைதானத்தில் இந்திய அணி மட்டுமே ஆடுவதால் அந்த சூழ்நிலைகள் மற்றும் பிட்ச் பற்றி அதிக புரிதல் இருப்பதாக வெளியில் தெரிந்தாலும், உண்மையில் சிக்கலான நிலையே உள்ளது. உலகக்கோப்பை போன்ற தொடர்களில் ஆஸ்திரேலிய அணி எப்போதுமே இந்திய அணிக்கு தலைவலியாகவே இருந்துள்ளது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையிலும் இதே போன்ற நிலைமை தான் ஏற்பட்டது. அப்போது இந்திய அணி சொந்த மண்ணில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிட்சை மாற்றினாலும் அதுவே இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது.