துபாய்: இந்திய அணி இந்த முறை எப்படியும் சாம்பியன்ஸ் டிராபியை வென்று தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அதற்காக மிகப்பெரிய வியூகத்தை வகுத்து அதை செயல்படுத்தியும் இருக்கிறார். இந்த முறை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாய் மைதானத்தில் விளையாட உள்ளது என்ற தகவல் முன்பே தெரிந்ததை அவர் பயன்படுத்தி வியூகம் வகுத்து இருக்கிறார்.
துபாய் மைதானத்தில் தான் இந்திய அணி அரையிறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளிலும் விளையாட உள்ளது என்பது உறுதியாகிவிட்டதால், கம்பீர் அதற்காகவே துவக்கம் முதல் வியூகத்தை வகுத்து வைத்திருக்கிறார். துபாயில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதை உணர்ந்து, இந்திய அணியில் ஐந்து சுழற்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தார்.

அதிலும் அவரது விருப்பமான டி20 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு ஒருநாள் அணியிலும் இடம் கிடைக்க வழி செய்தார். இந்தத் தொடருக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருந்த வருண் சக்கரவர்த்திக்கு, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் கிடைக்க அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
"எதற்கு இந்திய அணியில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள்?" என அப்போது பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றனர். அதனால் இந்திய அணி 5 சுழற்பந்துவீச்சாளர்களை 15 வீரர்கள் அடங்கிய அணியில் தேர்வு செய்தது தவறான முடிவாக வல்லுனர்களாலும் பார்க்கப்பட்டது.
ஆனால் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் தனது வியூகத்தை வெளிப்படுத்தினார் கவுதம் கம்பீர். அந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு வேகப்பந்துவீச்சாளர் (ஷமி), ஒரு பகுதி நேர வேகப்பந்து வீச்சாளர் (ஹர்திக் பாண்டியா) மற்றும் அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி என நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடியது.
அந்த நான்கு சுழற்பந்துவீச்சாளர்களில் அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்யக்கூடியவர்கள் என்பதால், இந்த வியூகம் இந்திய அணிக்கு மேலும் சாதகமாக அமைந்தது. நியூசிலாந்து அணி 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போது, இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிலும் கம்பீரின் துருப்புச்சீட்டு வீரரான வருண் 5 விக்கெட்களை வீழ்த்தி முத்திரை பதித்து இருந்தார்.
இதே வியூகத்தை தான் அரையிறுதி போட்டியிலும் இந்திய அணி செயல்படுத்த உள்ளது. ஆஸ்திரேலிய அணி எப்போதுமே இந்தியாவுக்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் தலைவலியாக இருக்கும் அணி. எனவே அந்த அணிக்கு எதிராக இந்திய அணி நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களம் இறக்கி அழுத்தத்தை கொடுக்க உள்ளது. நியூசிலாந்து போட்டி அதற்கான ஒரு முன்னோட்டமாகவே அமைந்தது.
கவுதம் கம்பீரின் முக்கிய திட்டமே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் எத்தனை ஓவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து வீச முடியுமோ, அத்தனை ஓவர்களை வீச வைக்க வேண்டும் என்பதுதான். இது நிச்சயம் பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. துபாயின் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருப்பது இந்த வியூகத்திற்கு வலு சேர்த்து உள்ளது.