துபாய்: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட உள்ள நிலையில், நிச்சயமாக அந்த அணியை வீழ்த்தி இந்தியா பழி தீர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
உலகக்கோப்பை போன்ற சர்வதேச தொடர்களில் ஆஸ்திரேலியா எப்போதுமே இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாகவே விளங்கி உள்ளது. சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி உலகின் முக்கிய அணியாக வளர்ந்து வந்த காலகட்டத்தில், 2003 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. ஆனால், அந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்றது.

சரியாக 20 ஆண்டுகளுக்கு கழித்து அதே சம்பவம் மீண்டும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு நடந்தது. அது ரசிகர்களுக்கு மனதில் ஆறாத ரணமாக உள்ளது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
இப்படி இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஆஸ்திரேலியா, இந்தியாவை வீழ்த்தி இருந்தது. இதற்கு நிச்சயமாக இந்திய அணி தற்போது பழி தீர்க்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா இதுவரை மூன்று குரூப் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றது. அதில் ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த நிலையில் மழையால் கைவிடப்பட்டது. எனவே, ஆஸ்திரேலிய அணி தற்போது அதிக போட்டி அனுபவம் இன்றி உள்ளது.
மேலும், இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுவரை தனது போட்டிகளை பாகிஸ்தானில் மட்டுமே விளையாடி இருந்தது. துபாயில் உள்ள மைதானத்தில் இந்த தொடரில் முதன்முறையாக இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் தான் விளையாடுகிறது என்பதால், அந்த அணிக்கு இந்த பிட்ச் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அதிக புரிதல் இல்லாமல் இருக்கலாம்.
இதை இந்திய அணி சரியாக பயன்படுத்தி நிச்சயமாக அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அப்போதுதான் இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு கொடுத்த அடிக்கு ஆறுதல் கிடைக்கும் என கூறி வருகின்றனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதை செய்யுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.