துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு இடம் அளிக்கப்படுமா? அல்லது அவர் அணியில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
முகமது ஷமி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஆனால் அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. எனினும் அவரது பந்துவீச்சு கட்டுக்கோப்பாக, சிறப்பானதாகவே உள்ளது. விக்கெட் வீழ்த்தவில்லை என்பது மட்டுமே குறையாக உள்ளது.

இந்த நிலையில் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு ஹர்ஷித் ராணாவை மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஷமியின் அனுபவம் இங்கே முக்கியத்துவம் பெறும்.
இந்த தொடரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளின் போது இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் ஹர்ஷித் ராணா வேகப்பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று இருந்தனர். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் சுழற்பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று இருந்தனர். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்த வியூகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
ஒரே ஒரு முழுநேர வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி மட்டும் நியூசிலாந்து போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பெற்றார். ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆடினார். அந்த வியூகம் வெற்றியும் பெற்றது. வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். வேகப்பந்துவீச்சில் முகமது ஷமிக்கு ஹர்திக் பாண்டியா உறுதுணையாக சில ஓவர்களை வீசினார்.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் இதே வியூகம்தான் தொடரும். ஆனால் முகமது ஷமிக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை களம் இறக்குவார்களா? என்ற கேள்வி உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி மிகவும் முக்கியமானது என்பதால் நிச்சயமாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி தான் இந்திய அணியில் விளையாட வைக்கப்படுவார்.
ஹர்ஷித் ராணா அதிக அனுபவம் இல்லாதவர் என்பதால் ஆஸ்திரேலிய அணி அவரை குறி வைத்து ரன் குவிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த ஆபத்தை உணர்ந்து இந்திய அணி முகமது ஷமியைத்தான் அணியில் ஆடவைக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது. நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அதே 11 வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் அரையிறுதியில் களமிறங்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.