துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் ஃபீல்டிங் முக்கிய காரணம் என ஓய்வறையில் அவருக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. அதோடு அவருக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதும் வழங்கப்பட்டது.
நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டனும், மூத்த வீரருமான ஸ்டீவ் ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் ஆட்டம் இழந்து சென்ற பின், அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டார்.

அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடி 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி மூன்று ஓவர்களில் அவர் அதிரடியாக ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி 249 ரன்களை எடுத்து இருந்தது. அலெக்ஸ் கேரி கடைசி மூன்று ஓவர்களில் சில சிக்ஸர்களை அடித்தால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 280 முதல் 290 வரை உயர்வதற்கான வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில் தான் 48-வது ஓவரின் முதல் பந்தில் அலெக்ஸ் ஒரு ரன் ஓட முயன்ற போது, ஸ்ரேயாஸ் ஐயர் தனது துல்லியமான த்ரோவால் அலெக்ஸ் கேரியை ரன் அவுட் செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் வீசிய த்ரோ நேராக ஸ்டம்பை தகர்த்தது. ஒரு வினாடி வித்தியாசத்தில் அலெக்ஸ் கேரி ரன் அவுட் ஆனார்.
ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ரன் அவுட் வாய்ப்பை தவற விட்டிருந்தால், அலெக்ஸ் கேரி நிச்சயமாக இந்த போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். ஆஸ்திரேலிய அணி 280 முதல் 290 ரன்கள் வரை எடுத்திருக்கும். துபாய் ஆடுகளத்தில் அத்தனை பெரிய இலக்கை சேஸிங் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை அளித்து இருக்கும்.
அதனால் இந்திய வீரர்கள் பதற்றத்தில் தங்களின் விக்கெட்டுகளை இழந்து இருக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், அலெக்ஸ் கேரி 48-வது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால், ஆஸ்திரேலிய அணி அதன் பின் 264 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இது இந்தப் போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
அதன் பின் பேட்டிங்கில் விராட் கோலி 84 ரன்கள் அடித்த போதும், ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் சரிவை தடுத்து 45 ரன்கள் சேர்த்திருந்தார். இதை அடுத்து போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்களின் ஓய்வறையில் சிறந்த ஃபீல்டரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுப்மன் கில், விராட் கோலி, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தப் போட்டியில் செய்த ஃபீல்டிங் முயற்சிகளை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் பாராட்டினார்.
ஆனால், இறுதியில் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த ரன் அவுட்டை குறிப்பிட்டு அவருக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் அவர் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறந்த ஃபீல்டருக்கான விருதை ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கினார்.