துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற விராட் கோலி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் அடித்தார். அப்போது அவர் மூன்று பிரம்மாண்ட சாதனைகளை முறியடித்து வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 36 வயதில் எந்த வீரரும் செய்ய முடியாத ஒரு விஷயத்தையும் அவர் இந்த போட்டியில் செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணியின் சேஸிங்கை விராட் கோலி முன் நின்று வழி நடத்தினார். அவர் சேர்த்த 84 ரன்களில் 56 ரன்கள் சிங்கிள்ஸ்களாகவே கிடைத்தவை. அதாவது கோலி 56 ரன்களை ஒவ்வொரு ரன்னாக ஓடி சேர்த்தார். ஐந்து பவுண்டரிகள் மட்டுமே அடித்து இருந்தார். அவரது ஆட்டம் இளம் வீரர்களுக்கு எப்படி சேஸிங் செய்ய வேண்டும் என பாடம் எடுப்பதை போல இருந்தது.

அப்போது 2000-வது ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் ஒற்றை ரன்களை சேர்த்த வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விராட் கோலி 5870 ரன்களை ஓடி எடுத்திருக்கிறார். அடுத்த இடத்தில் இருக்கும் இலங்கையின் குமார் சங்கக்காரா 5688 ரன்களை ஒற்றை ரன்களாக ஓடி எடுத்து இருக்கிறார்.
இதை தவிர்த்து 84 ரன்கள் அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். தற்போது விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் 746 ரன்கள் எடுத்து இருக்கிறார். ஷிகர் தவான் 701 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். அதை விராட் கோலி முறியடித்து இருக்கிறார்.
மேலும், ஒருநாள் போட்டிகளில் சேஸிங்கில் மட்டும் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ஆனால், அதில் தற்போது புதிய மைல்கல்லாக 8000 ரன்களை எட்டி இருக்கிறார். 159 இன்னிங்ஸ்களில் சேஸிங் செய்து 8063 ரன்களை விராட் கோலி எடுத்து இருக்கிறார். அவரது சராசரி 64.5 ஆக உள்ளது. முதல் இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் 232 இன்னிங்ஸ்களில் 8720 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவரது சராசரி 42.39 ஆக உள்ளது.