பெர்த்: ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேவை இன்றி விராட் கோலியை சீண்டி விட்டு விட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெறிகொண்டு ஆடுவார் என்றும் முன்னாள் வீரர் ஷேன் லீ குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. சமீப காலமாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மில் இருக்கிறார். கடத்த ஐந்து ஆண்டுகளில் அவரது டெஸ்ட் பேட்டிங் செயல்பாடு பெரும் சரிவை சந்தித்து உள்ளது.

அவர் கடைசியாக ஆடிய 60 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 11 அரை சதங்கள் மட்டுமே அடித்து இருக்கிறார். இந்த ஆண்டு ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி, அதில் மோசமாக செயல்பட்டு 22.72 என்ற பேட்டிங் சராசரி மட்டுமே வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார். அது குறித்து ஒரு பேட்டியில் பேசி இருந்த ரிக்கி பாண்டிங், ஐந்து ஆண்டுகளில் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்து இருக்கும் விராட் கோலி, வேறு அணியில் இருந்தால் நிச்சயம் நீக்கப்பட்டு இருப்பார் என சுட்டிக் காட்டினார்.
அது விராட் கோலியை சீண்டி விட்டு விடும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் லீ கூறி இருக்கிறார். இது பற்றி ஷேன் லீ பேசுகையில், "ரிக்கி பாண்டிங் செய்தது மோசமான ஒரு நகர்வு. என்ன செய்து இருக்கிறீர்கள் பாண்டிங்? நீங்கள் விராட் கோலியை வெறி கொள்ள வைக்கப் போகிறீர்கள். அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் வெறி கொண்டு ஆடுவார்." என்றார்.
மேலும், "இது நிச்சயம் அற்புதமான தொடராக இருக்கும். இதில் ஏற்கனவே காரம் சேர்க்கப்பட்டு விட்டது. இந்தியா ஏ அணிக்கு எதிராக பந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டுகள் மற்றும் விராட் கோலி பற்றி ரிக்கி பாண்டிங் பேசியது ஆகியவை இந்த தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றி உள்ளது." என்றார் ஷேன் லீ.