சிட்னி: ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னேவை நினைக்கும் போது எமோஷனலாக உணர்வதாகவும், அவரை ஒவ்வொரு முறை நினைக்கும் போதும், குடும்பத்தில் உள்ள ஒருவரை இழந்ததை போல் இருப்பதாகவும் இந்திய நட்சத்திர ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக உருவாகியுள்ள குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியா மண்ணில் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஏனென்றால் கடந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியில் இருந்தாலும், குல்தீப் யாதவிற்கு மட்டும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறும் 2 ஸ்பின்னர்களில் குல்தீப் யாதவும் ஒருவராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குல்தீப் யாதவ் எம்சிஜி மைதானத்திற்கு ஒரு விசிட் அடித்துள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் பேசுகையில், என்சிஜி மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே பார்க்கும் போது, எனது குடும்பத்தில் உள்ள ஒருவரை இழந்ததை போல் உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் ஷேன் வார்னேவை நினைக்கும் போது எமோஷனலாக இருக்கும். அவர் தான் என்னுடைய ரோல் மாடல். அவருக்கும் எனக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமையகத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஐகானிக் எம்சிஜி மைதானத்தில் பார்டர் - கவாஸ்கர் டிராபி நடக்கவுள்ளது. இந்த ஆண்டில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நிச்சயம் சிறப்பானதாக இருக்கும். இந்திய அணிக்கு உலகின் எந்த திசைக்கு சென்றாலும் ரசிகர்களின் ஆதரவு இருக்கும்.
நிச்சயம் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கும் அதிகளவிலான ரசிகர்கள் வந்து ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்தில் இந்தியா திரும்பவுள்ள குல்தீப் யாதவ், துலீப் டிராபி தொடரில் விளையாட தயாராகுவார் என்று பார்க்கப்படுகிறது. துலீப் டிராபியில் சுப்மன் கில் தலைமையிலான டீம் ஏ-வில் குல்தீப் யாதவ் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.