மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்தது.
அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்தப் போட்டியில் சிவம் துபேவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஏனென்றால் பேட்டிங்கில் சிவம் துபே 18 பந்துகளில் 22 ரன்களை விளாசினார். அதிலும் சிவம் துபே அடித்த ஒரு சிக்சர் மைதானத்தை விட்டு வெளியில் சென்றது.

இதன்பின் பவுலிங்கில் 2 ஓவர்களை வீசிய சிவம் துபே 20 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் மற்றும் டிம் டேவிட் விக்கெட்டை சிவம் துபே கைப்பற்றினார். டிம் டேவிட்டுக்கு ஷார்ட் பால் வீசி சிவம் துபே விக்கெட் எடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சிவம் துபே பேசுகையில், இந்திய அணி சேர்த்த 167 ரன்கள் நிச்சயம் சிறந்தது தான். ஏனென்றால் எங்களிடம் சிறந்த பவுலிங் இருக்கிறது. நிச்சயமாக வேகப்பந்துவீச்சாளர்களை சொல்லியே ஆக வேண்டும். நான் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த அணியும் வேகப்பந்துவீச்சாளர்களை நம்புகிறது. டி20 கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனாலும் பேட்டை சுழற்றி ரன்களை சேர்க்க முடியும்.
ஆனால் இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் பெரியளவில் உள்ளன. அதனால் எங்களால் சரியாக திட்டமிட முடிந்தது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை எங்களால் கட்டுப்படுத்த முடிட்யும் என்று நம்பிக்கையோடு விளையாடினோம். ஒவ்வொரு போட்டியிலும் பிளேயிங் லெவனில் இடம்பெறும் போது, நான் பவுலிங் செய்ய வேண்டும் என்பதை அறிந்தே களத்திற்கு வருகிறேன்.
மோர்க்கல், கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் சிறந்த திட்டத்தை எனக்காக வைத்துள்ளார்கள். மோர்க்கல் எப்போதும் சின்னச் சின்ன தகவல்களை பரிமாறிக் கொண்டே இருப்பார். அது எனது பவுலிங்கை மேலும் சிறப்பாக மாற்றுகிறது. அதேபோல் பேட்டிங்கில் அதிகமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்தியாவை ஒப்பிடும் போது ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் அதிகம். அதனை அறிந்து பயிற்சி மேற்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.