ராய்ப்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஓய்வில் இருந்து அணியை பலப்படுத்த வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு பாதகமாக செயல்பட்டதை அடுத்து ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும், ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்க வேண்டி நல்ல ஃபார்மில் இருந்த இஷான் கிஷனை அணியில் இருந்து நீக்கியதை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியில் அதிரடியாக நான்கு மாற்றம் செய்யப்பட்டது.

வேகப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு முகேஷ் குமார், தீபக் சாஹர் அணியில் வாய்ப்பு பெற்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டதால் அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால் அவருக்கு பதிலாக மூன்றாம் வரிசையில் பேட்டிங் இறங்கி வந்த இஷான் கிஷன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் என்பதால் அதை ஈடுகட்ட திலக் வர்மா நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் ஆட வைக்க வேண்டி இரண்டு வீரர்களை நீக்கியது இந்திய அணி.
இந்திய அணி நான்கு மாற்றங்களை செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடி 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு பதிலாக இஷான் கிஷன் ஆடி இருந்தாலே நன்றாக ரன் குவித்து இருப்பார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார் என ரசிகர்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த பின் சூர்யகுமார் யாதவ் அடுத்த மூன்றாவது பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், அதன் பின் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா அதிரடி ஆட்டம் ஆடியதால் இந்தியா ரன் சேர்த்தது. ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.