மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் விளங்கும் நிலையில் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். டி20 அணியின் துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வென்று தந்துள்ளார்.
இதேபோன்று பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றுள்ளார். ஆனால் கில் ஒரு நாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த நெஹல் வதேரா ஸ்ரேயாஸ் ஐயரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், ரிக்கி பாண்டிங் போன்ற ஒரு ஜாம்பவான் இந்தியாவின் சிறந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என்று குறிப்பிடுகிறார் என்றால் அவர் ஸ்ரேயாஸ் இடம் சிறந்த குணத்தை பார்த்திருப்பார். என்னை பொறுத்தவரை நானும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்தியாவில் இருக்கும் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்று நினைக்கின்றேன்.
பேட்டிங் செய்யும் போது நீங்கள் ஒரு கேப்டன் என்பதை மறந்துவிட வேண்டும். நான் நிறைய வீரர்களை பார்த்திருக்கின்றேன். கேப்டனாக சிலர் நியமிக்கப்பட்ட பிறகு ரன் எடுக்க கொஞ்சம் நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். நாம் பின்பற்றாத ஒரு விஷயத்தை புதிதாக செய்யும் போது அது சில சமயம் நமது பேட்டிங்கை பாதிக்கும்.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக மற்ற வீரர்களுக்கு துணையாக நிற்பார். என்னுடைய தனிப்பட்ட விளையாட்டை ஸ்ரேயாஸ் தெரிந்து கொண்டிருப்பார். குவாலிஃபயரில் மும்பை அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தின் போது ட்ரெண்ட் போல்ட் ஒரு ஃபுல் டாஸ் பந்தை வீசினார். அதை நான் சிங்கிள் எடுத்தேன்.
அப்போது ஸ்ரேயாஸ் உடனே நீ என்ன செய்கின்றாய்? அந்த பந்தை ஏன் சிக்ஸருக்கு அடிக்கவில்லை என்று கேட்டார். அதற்கு அது கடைசி பந்து என்பதால் தான் நான் சிங்கிள்ஸ் எடுத்தேன் என்று கூறினேன். உடனே அதற்கு ஸ்ரேயாஸ் உன்னால் அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது ஏன் சிக்ஸர் அடிக்காமல் சிங்கிள் எடுத்தாய். இந்த நேரத்தில் ரிஸ்க் எல்லாம் பார்க்க கூடாது.
பந்து நீ அடிக்கும் இடத்திற்கு வந்துவிட்டால் பத்துக்கு ஒன்பது முறை நீ அந்த பந்தை சிக்ஸர் அடிப்பாய். எனவே நீ அடித்து விளையாடு, நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறினார் என நெஹல் வதேரா தெரிவித்தார். கடந்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வதேரா 15 போட்டிகள் விளையாடி 369 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும்.