IND vs AUS: ஒரே ஒரு கேட்ச்.. ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியில் நீக்கம்? தென்னாப்பிரிக்க தொடரில் சந்தேகம்
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த நிலையில், அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கேட்ச் பிடிக்கப் போய் சுமார் ஒரு மாத காலம் கிரிக்கெட் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். அந்தப் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் அலெக்ஸ் கேரியின் கேட்சைப் பிடித்தபோது, ஸ்ரேயாஸ் ஐயரின் இடது பக்க விலா எலும்புக் கூட்டில் (Left Rib Cage) காயம் ஏற்பட்டது. இதனால், அவர் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு ஆட்டத்திலிருந்து விலகி இருக்க நேரிடும் என்றும், காயம் தீவிரமாக இருந்தால் குணமடைய அதிக காலம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, நவம்பர் 30 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தப் போட்டியின்போது கேட்ச் பிடித்த பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் வலியால் துடித்தார். அவர் கீழே விழுந்த விதம், அவரது இடது பக்க விலா எலும்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அணியின் பிசியோ கமலேஷ் ஜெயின் அவரை மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார். பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "போட்டியின் போதே ஸ்ரேயாஸ் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்ப கட்ட பரிசோதனைகளின்படி, அவருக்கு விலா எலும்பில் ஒரு 'ஜெர்க்' (Jerk) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும்."
"இந்தியா திரும்பியதும், அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) சென்று அறிக்கை அளிக்க வேண்டும். காயத்தின் தன்மை குறித்து மேலதிக அறிக்கைகள் வந்த பிறகே, அவர் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஒருவேளை, அதில் ஹேர்லைன் ஃபிராக்சர் (Hairline Fracture) இருந்தால், அவர் குணமடைய இன்னும் அதிக காலம் ஆகலாம்" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
தென்னாப்பிரிக்கத் தொடர் கேள்விக்குறி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பாரா என்று கேட்டதற்கு, "இப்போதே சொல்வது கடினம். அவர் விளையாட்டிற்குத் திரும்ப மூன்று வாரங்கள் ஆகும் என்றால், நவம்பர் 30 ஆம் தேதி போட்டிக்குத் தயாராவது மிகவும் கடினமாக இருக்கலாம்" என்று பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.
30 வயதான ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை எட்ட அவருக்கு இன்னும் 83 ரன்களே தேவை. சமீபத்தில் அடிலெய்டில் நடந்த இரண்டாவது போட்டியில், தனது புதிய பேட்டிங் ஸ்டைலில் 61 ரன்கள் குவித்து ஃபார்முக்குத் திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸின் காயம், உலகக் கோப்பைக்கு முந்தைய முக்கியமான தென்னாப்பிரிக்கத் தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications