மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கோலி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 7,11,3 ஆகிய ரன்களை தான் அடித்திருந்தார்.
குறிப்பாக ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே செல்லும் பந்தை தேவையில்லாமல் அடித்து விராட் கோலி அவுட் ஆகி வருகிறார். இந்த நிலையில் தான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாக விராட் கோலி கூறியுள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விராட் கோலி உரையாடினார். அப்போது பேசிய அவர், நான் கடந்த இரண்டு மூன்று இன்னிங்ஸ்களாக சரியாக விளையாடவில்லை. நான் எதிர்பார்த்த மாதிரி ரன்கள் சேர்க்க வில்லை. நான் பேட்டிங்கிற்கு தேவையான ஒழுக்கமுறையை பின்பற்றவில்லை என ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் நமக்கு கொடுக்கும் சவால். கடந்த முறை நான் இங்கு விளையாடியதை விட இம்முறை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாம் வித்தியாசமான அணுகு முறையை வெளிப்படுத்தி தான் ரன்கள் சேர்க்க வேண்டும். இதை நான் கர்வத்துடன் செய்யப் போகிறேன். இதுபோன்ற நெருக்கடியான கள சூழலை எதிர்கொண்டு அணி என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதை நிச்சயம் செய்வேன்.
இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் நான் அதிக பந்துகளை எதிர் கொண்டு களத்திற்கு உரிய மரியாதை கொடுத்து ரன்கள் சேர்க்க போகிறேன். கடந்த முறை நாங்கள் இங்கு விளையாடிய போது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றோம். 2014 ஆம் ஆண்டு தொடரில் கூட நான் இங்கு சதம் அடித்தேன். மெல்போன் டெஸ்ட் போட்டி எனக்கு நல்ல நினைவுகளை தருகிறது.
நான் நன்றாக ரன் சேர்க்க வேண்டும் என என் மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கிறது. ஆனால் நமது திட்டத்தை புரிந்து கொண்டு விளையாடி பேட்டிங்களுக்கான ஒழுக்கம் முறையை கடைப்பிடித்தால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும். போட்டியில் சூழலை நான் புரிந்து கொண்டு விளையாடுவதன் மூலம் தான் எனக்கு வெற்றி கிடைக்கிறது.அதை நான் இம்முறை கண்டிப்பாக செய்வேன். ஒருவேளை விக்கெட் விழுந்து நான் முன்பே பேட்டிங் செய்ய சூழல் ஏற்பட்டால் அதற்கு ஏற்றார் போல் விளையாடுவேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.