மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து குல்தீப் யாதவ் ரிலீஸ் செய்யப்பட்டதை போல், சுப்மன் கில்லையும் இந்தியாவுக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி போதுமான முக்கியத்துவத்தை இந்த டி20 தொடருக்கு அளிக்காத போது, சுப்மன் கில்லை தொடர்ச்சியாக விளையாட வைத்து அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் இருக்கின்றன. முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 2 போட்டிகளிலும் வெல்லும் அணியே டி20 தொடரை கைப்பற்றும்.

இதனிடையே வாஷிங்டன் சுந்தரின் எழுச்சி காரணமாக, குல்தீப் யாதவ் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நாளை மறுநாள் தென்னாப்பிரிக்கா ஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாட உள்ள போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ஆஸ்திரேலியா டி20 அணியில் இருந்து டிராவிஸ் ஹெட் வெளியேற்றப்பட்டுள்ளார். விரைவில் ஆஷஸ் தொடர் நடக்க உள்ளதால், டிராவிஸ் ஹெட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதற்கு தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டும் என்பதே காரணமாக சொல்லப்படுகிறது. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சுப்மன் கில்லையும் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பாதது ஏன் என்பதுதான். ஹேசல்வுட்டையும் கூட ஆஸ்திரேலியா இனி விளையாட அனுமதிக்கவில்லை. அடுத்து வரும் தொடரை விடவும் தற்போது கிரிக்கெட் தொடருக்கு முக்கியத்துவம் குறைவாக அளிக்கப்படுகிறது.
அப்படியென்றால் எதற்காக இரு அணிகளும் விளையாட வேண்டும்? என்னுடைய மனதில் சுப்மன் கில்லையும் சேர்த்து இந்திய அணி நிர்வாகம் ரிலீஸ் செய்திருக்கலாம். ஏனென்றால் இந்த டி20 தொடர் சுப்மன் கில்லுக்கு சிறந்த ஒன்றாக அமையவில்லை. அடுத்த 2 போட்டிகளிலும் சுப்மன் கில் ரன்கள் சேர்க்கவில்லை என்றால், அவர் மீதான அழுத்தமும் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஜெய்ஸ்வாலும் வாய்ப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். சுப்மன் கில்லே கம்பீரிடம் பேசி ரிலீஸ் செய்ய வலியுறுத்தி இருக்கலாம். ஏனென்றால் அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடர் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற அணி என்பதால், கில் கூடுதலாக தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.