ஹோபர்ட்: இந்திய டி20 அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் கடைசி 10 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஏமாற்றம் அளித்துள்ளார். சுப்மன் கில்லை விளையாட வைப்பதற்காக சஞ்சு சாம்சனை பெஞ்ச் செய்ததோடு, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பேலன்ஸும் மாறியுள்ளது. இதனால் கம்பீர் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் - அபிஷேக் சர்மா தொடக்கம் கொடுத்தனர்.

இதில் சுப்மன் கில் 12 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதிலும் 4 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்து அமர்க்களப்படுத்தினார். ஆனால் சுப்மன் கில்லின் ஆட்டம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் சுப்மன் கில் துணைக் கேப்டன் பொறுப்பில் இருப்பதால், தொடர்ச்சியாக வாய்ப்பை பெற்று வருகிறார். இவருக்காக தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் மிடில் ஆர்டரில் சோபிக்க தவறிய சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர, சுப்மன் கில் தொடக்க வீரராகவே சொதப்பி வருகிறார். டி20 கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 10 இன்னிங்ஸில் சுப்மன் கில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஒரேயொரு முறை மட்டுமே 40 ரன்களை கடந்துள்ளார். இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராக சுப்மன் கில்லை உருவாக்க பிசிசிஐ முனைந்து வருகிறது.
ஆனால் சுப்மன் கில் அதற்கான பொறுப்புடன் விளையாடுவதில்லை. கன்சிஸ்டன்சி பிரச்சனையின் உச்சத்தில் சுப்மன் கில் இருந்து வருகிறார். இதனால் பயிற்சியாளர் கம்பீர் இனியாவது சுப்மன் கில்லின் இடத்தை சஞ்சு சாம்சனுக்கோ அல்லது ஜெய்ஸ்வாலுக்கோ கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.