சிட்னி: கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அணி ஆசியாவுக்கு வெளியில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது விமர்சனத்தை பெற்றுள்ளது. இதனால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு சுப்மன் கில்லுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்-ஐ இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், 4 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. ரவீந்திர ஜடேஜா 8 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களும் சேர்த்து களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் சுப்மன் கில் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 5 இன்னிங்ஸில் ஆடி 93 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் ஆசியாவுக்கு வெளியில் கடைசியாக ஆடிய 3 ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், தற்போது ஆஸ்திரேலியா மண்ணிலும் சொதப்பி இருக்கிறார். அதேபோல் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதும், அவரால் இன்னும் இன்னிங்ஸை எப்படி கட்டமைப்பது என்பதை அறியாமலேயே இருந்து வருகிறார். ஒவ்வொரு முறை நல்ல தொடக்கம் கிடைத்தும் வீணடித்து வருகிறார்.
2022 முதல் ஆசியாவுக்கு வெளியில் இந்திய அணி ஆடிய போட்டிகளில் 15 இன்னிங்ஸில் மொத்தமாக 251 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் டெஸ்ட் அணியில் இருந்து சுப்மன் கில்லை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் சாய் சுதர்சன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.