குயின்ஸ்லாண்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 11 இன்னிங்ஸாக தொடர்ந்து ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சுப்மம் கில் சொதப்பி வருவது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவரும் நிதானமாக விளையாடி 6 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்திருந்தனர்.

அப்போது அதிரடிக்கு திரும்ப முயன்ற அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த சிவம் துபேவும் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேற, சுப்மன் கில் 30 பந்துகளில் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார். இனியாவது சுப்மன் கில் அதிரடிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஒரு சிக்சரை விளாசினார்.
ஆனால் எல்லீஸ் வீசிய அடுத்த ஓவரிலேயே சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்ககள் எடுத்து போல்டாகி வெளியேறினார். இதன் மூலமாக சுப்மன் கில் கடைசியாக ஆடிய 11 டி20 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்ற மோசமான சாதனையையும் தொடர்ந்து வருகிறார். இதனால் சுப்மன் கில்லிடம் கன்சிஸ்டன்சி பிரச்சனை தொடர்ந்து வருவதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் சுப்மன் கில்லுக்கு தொடக்க காலம் முதலே அட்டாக்கிங் ஸ்டைலில் விளையாடும் பழக்கம் கிடையாது. எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் பாதுகாப்பான ஷாட்களையே விளையாடுவார். ஐபிஎல் தொடரில் அப்படிதான் டாப் ஆர்டரில் விளையாடி வந்தார். கிட்டத்தட்ட கேஎல் ராகுலின் அடுத்த வடிவமாகவே சுப்மன் கில் பேட்டிங் செய்வார்.
இதனால் வரும் போட்டிகளிலாவது சுப்மன் கில்லை துணைக் கேப்டன் என்று பார்த்து முடிவு எடுக்காமல், உடனடியாக பெஞ்ச் செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அவரது இடத்தில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சனை கொண்டு வந்தால், இந்திய அணிக்கும் ஒரு சிறந்த பேலன்ஸ் கிடைக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.