பெர்த்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்று இருக்கும் சுப்மன் கில்லுக்கு விரலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறி உள்ளது.
முன்னதாக கே எல் ராகுல் பயிற்சிப் போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டு ஆடுகளத்தை விட்டு விலகி இருந்தார். விராட் கோலிக்கு "எக்ஸ் ரே" எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் பயிற்சிப் போட்டியில் பங்கேற்றார். கே எல் ராகுல் மற்றும் கோலி டெஸ்ட் தொடரில் பங்கேற்பார்கள் என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து கூறப்பட்டாலும் அவர்களுக்கு மீண்டும் காயம் ஏற்பட்ட இடத்தில் பந்து தாக்கினால் விலகும் நிலையே உள்ளது.

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி ஆடி வரும் சுப்மன் கில்லுக்கு விரலில் காயம் ஏற்பட்டதால் முதல் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறி உள்ளது.
முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டு இருந்த நிலையில், அவர் இன்னும் இரண்டு நாட்களில் ஆஸ்திரேலியா கிளம்பிச் செல்ல உள்ளதாகவும், முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை அடுத்து அவர் தனது விடுப்பை முடித்துக் கொண்டு இந்திய அணியுடன் இணைய இருக்கிறார்.
சுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆட முடியாமல் போனால் மூன்றாம் வரிசையில் கே எல் ராகுல் அல்லது துருவ் ஜுரல் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. கே எல் ராகுல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். துருவ் ஜுரல் இந்தியா ஏ அணிக்காக சமீபத்தில் சிறப்பாக ஆடி இருந்தார். ஆனால், அவர் மூன்றாம் வரிசையில் இதற்கு முன் பேட்டிங் செய்ததில்லை. இது போன்ற சிக்கல்களை இந்திய அணி சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.
மூன்றாம் வரிசையை தவிர்த்து பார்த்தால், துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, நான்காம் வரிசையில் விராட் கோலி, தொடர்ந்து சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.