பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். புதிய கேப்டன் பும்ரா தலைமையில் இந்திய அணி பெர்த் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள நிலையில், இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் காயமடைந்து வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே ரோஹித் சர்மா இல்லாத நிலையில், நம்பர் 3ல் யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேவ்தத் படிக்கல், நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 2ஆம் பாதியில் முகமது ஷமி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பெர்த் டெஸ்ட் போட்டிக்கான பிட்சினை இரு அணிகளின் வீரர்களும் இன்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசுகையில், சுப்மன் கில்லை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் காயத்தில் இருந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். அதனால் பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறாரா என்பதை நாளை மறுநாள் காலை தான் முடிவு எடுப்போம். இந்திய வீரர்களுக்கு இடையிலான போட்டியில் சுப்மன் கில் மிகச்சிறப்பாக விளையாடி இருந்தார்.
அதனால் முதல் டெஸ்டில் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நிச்சயம் அழுத்தம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இளம் வீரர்களை பற்றி ஏராளமான விஷயங்கள் வெளியில் தெரியாது. அதனால் ஒவ்வொரு செஷனிலும் அவர்களுக்கான ஆலோசனையை அளிப்போம். ஆஸ்திரேலியா அணியின் பவுலர்கள் மோசமான பந்துகளை எளிதாக வீச மாட்டார்கள்.
அதேபோல் இந்த விக்கெட்டும் கொஞ்சம் வேகம் மற்றும் பவுன்ஸ்-க்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியின் கேப்டன் பும்ரா இயற்கையாக தலைமை பொறுப்புக்கு ஏற்றவர் என்று கருதுகிறேன். அவருக்கு உறுதுணையாக நாங்களும், சீனியர் வீரர்களும் இருக்கிறோம். அதேபோல் விராட் கோலியின் தொழில் பக்தி ஆச்சரியம் அளிக்கிறது.
ஒவ்வொரு முறை வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது, தன்னை தானே அழுத்தத்தில் தள்ளிக் கொள்கிறார். அவரின் உயரத்தை எட்டுவதற்கு இளம் வீரர்களுக்கு இன்னும் சில காலம் பிடிக்கும். நிதீஷ் குமார் ரெட்டியை பொறுத்தவரை இளம் பேட்டிங் ஆல்ரவுண்டராக உருவாகி வருகிறார். முதல் 2 நாட்களுக்கு அவர் ஒரு முனையில் இருந்து நிச்சயம் பவுலிங் செய்ய வேண்டிய சூழல் வரலாம்.
அவர் விக்கெட் டூ விக்கெட் பவுலர். அதனால் எந்த அணியிலும் எளிதாக இடம்பிடிக்க கூடியவர். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பார். அவரை ஜஸ்பிரிட் பும்ரா எப்படி பயன்படுத்துவார் என்பதை பொறுத்து தான் அவரின் பவுலிங் இருக்கும். ஆனால் நிச்சயம் எங்களின் கண் இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் எப்போது வேண்டுமானாலும் அவர் விளையாடலாம்.
முகமது ஷமியை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக காயத்தில் இருந்து குணமடைய நேரம் எடுத்துள்ளார். அவர் மீண்டும் பவுலிங் செய்ய தொடங்கி இருப்பதே எங்களின் மிகப்பெரிய வெற்றி. இந்தியாவில் அவருடன் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.