மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து t20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் கடைசி டி20 போட்டி சனிக்கிழமை பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில், பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனம் இருந்துள்ளது.
மூன்றாவது டி20 போட்டியில் கூட 39 பந்துகளை எதிர் கொண்டு அவர் வெறும் 46 ரன்கள் தான் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 117 என்று அளவில் இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, கில் மீது ஏதோ ஒரு பெரிய அழுத்தம் இருக்கிறது.

ஏனென்றால் அவர் தற்போது ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். மூன்றாவது டி20 போட்டியில் அவர் விளையாடிய முதல் 10, 12 பந்துகளை பார்த்தீர்கள் என்றாலே உங்களுக்கு புரியும்.அவர் அபிஷேக் ஷர்மாவை விட வேகமாக ரன்கள் சேர்த்தார். ஆனால் திடீரென்று அவருடைய ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.(3வது டி20 போட்டியில் கில் எதிர்கொண்ட 11 பந்துகளில் 3 பவுண்டரி அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
ரன்கள் அவரிடம் இருந்து பெரிய அளவுக்கு வரவில்லை. அதிக பந்துகளை அவர் எதிர்கொண்டார். நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடுகிறீர்கள். உங்கள் அணி ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்கிறது. அந்தத் திட்டத்தை தான் அனைத்து வீரர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
அந்த அதிரடி திட்டத்தில் உங்களை நீங்களே பொருத்திக் கொள்ள வேண்டும். அதை கில்லும் கண்டிப்பாக பின் தொடர்ந்து அதிரடியை காட்ட வேண்டும். ஒருவேளை கில் கடைசி வரை நின்று அணியை நல்ல இலக்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால் அது தவறாக முடிந்து விடும்.
ஏனென்றால் பின்னர் வரும் வீரர்கள் அதிரடி காட்டுகிறேன் என விக்கெட்டுகளை இழக்கவும் வாய்ப்பிருக்கின்றது. அது மீண்டும் கில் மீதுதான் அழுத்தத்தை கொடுக்கும். கில் ஒரு 30-35 ரன்களை அதிவேகமாக அடித்தால் கூட எனக்கு போதுமானது. ஒருவேளை கில் 30, 35 ரன்கள் அடிப்பது போதாது என்று நினைக்கலாம். நிச்சயமாக கில் ஒரு வினோத சூழ்நிலையில் சிக்கி இருக்கிறார்.
பொதுவாக இது போன்ற அழுத்தங்கள் துணை கேப்டன் மீது கேப்டன்கள் மீதோ ஏற்படாது. ஆனால் கில்லுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கிறது என்றால் அதற்கான வழியை அவர் தான் கண்டுபிடிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சூரியகுமார் கூட பெரிய ரன்களை இந்த தொடரில் அடிக்கவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்று அவர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். கடந்த டி20 போட்டியில் கூட அவர் சிறப்பாக விளையாடினார். ஆனால் பேட்டிங் வரிசையில் நிலையற்ற தன்மை இருக்கின்றது. அதுவே ஒரு பெரிய அழுத்தத்தை வீரர்களுக்கு ஏற்படுத்தும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.