சிட்னி: இந்திய டெஸ்ட் அணியிலிருந்து மூத்த வீரர்களை ஓரங்கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், இதற்கு இடையே "குரூப்ல டூப்பு வீரர்" ஒருவர் இந்திய அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். அவருக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வீரர் சுப்மன் கில்.
சுப்மன் கில் இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 59 இன்னிங்ஸ்களில் 1893 ரன்களை எடுத்து இருக்கிறார். இதில் இந்தியாவில் மட்டுமே அவர் 1177 ரன்களை எடுத்து இருக்கிறார். மற்ற நாடுகளில் மிக சொற்ப ரன்களை எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி இந்தியாவில் 42 என்பதாக உள்ளது.

அதற்கு அடுத்து அதிகபட்சமாக வங்கதேசத்தில் அவரது பேட்டிங் சராசரி 39.25 என்பதாக உள்ளது. ஆனால், மற்ற நாடுகளில் அது 35 அல்லது அதற்கும் கீழே உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் 14.66 பேட்டிங் சராசரியையும், தென்னாப்பிரிக்காவில் 18.50 என்ற பேட்டிங் சராசரியையும் வைத்து இருக்கிறார் சுப்மன் கில்.
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி வரும் நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அஜின்க்யா ரஹானே வெளிநாடுகளில் ரன் குவித்த போதும் இந்தியாவில் அதிக ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் அதிக விக்கெட்களை வீழ்த்திய போதும், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தவில்லை என்ற காரணத்தால் அவருக்கு பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படி மூத்த வீரர்கள் அனைத்து நாடுகளிலும் சரியாக செயல்படவில்லை என்ற காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்ட போதும் சுப்மன் கில்லுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை எனவும், அவர்களை தேர்வு குழு நீக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், சுப்மன் கில்லும் தான் மோசமாக செயல்படுகிறார். அவருக்கு மட்டும் ஏன் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது? கோலி, ரோஹித்தை அனுப்பும் முன் கில்லையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக அறியப்பட்ட புஜாராவுக்கு பதிலாகத்தான் சுப்மன் கில் இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார்.
இதுவரை 32 போட்டிகளில் ஆடி இருக்கும் சுப்மனின் பேட்டிங் சராசரி 35 மட்டுமே, இவர் எப்படி புஜாராவுக்கு சிறந்த மாற்று வீரராக இருக்க முடியும்? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சுப்மன் கில்லுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஜெய்ஸ்வால் 19 போட்டிகளிலேயே கில்லின் டெஸ்ட் ரன்களை நெருங்கி விட்டார். ஆனால், 32 போட்டிகளில் ஆடி இருக்கும் கில் இன்னும் 2000 டெஸ்ட் ரன்களை தாண்டவில்லை.