மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டி20 போட்டிகளில் மிக எச்சரிக்கையுடன் விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
கில் இதுவரை டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த பிறகு ஒரு முறை கூட அரை சதம் அடிக்க வில்லை. கில் காரணமாக நல்ல ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனும் நடுவரிசைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கில் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

முதல் சில ஓவர்களில் கொஞ்சம் பொறுமை காத்துக் கொண்டு அதன்பிறகு கூட நீங்கள் அதிரடி காட்டி வீணடித்த பந்துகளுக்கு ஏதுவாக ரன்களை சேர்த்துக் கொள்ளலாம். அதற்கான திறமை பேட்டிங் ஷாட்கள் கில்லிடம் நிறையவே இருக்கின்றது. சஞ்சு சாம்சன் போன்ற வீரர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மூன்று முறை டி20 போட்டிகளில் சதம் அடித்து இருக்கின்றார். அப்படி இருக்கும்போது கில்லுக்காக தன்னுடைய இடத்தை அவர் தியாகம் செய்திருக்கிறார். இதேபோன்று ஜெய்ஸ்வாலும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இது எல்லாம் கில்லுக்கு தெரியாமல் இல்லை. இதுவே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கலாம். நான் சஞ்சு சாம்சனாக இருந்தால் இவ்வளவு ரன்கள் அடித்தும் இவ்வளவு உழைத்தும் இவ்வளவு ஆண்டுகள் இருந்தும் நமக்கு அணியில் இடம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவேன்.
நான்காவது டி20 போட்டியில் ஹேசல்வுட் இல்லை. டிராவிஸ் ஹெட் இல்லை. இது நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி எளிதில் வெற்றி பெறலாம். ஹெட் போன்ற ஒரு முக்கிய வீரர் இல்லாமல் விளையாடுவது அந்த அணியின் பலத்தை குறைக்கும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.