சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாகவும், தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை விளையாடுகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், நாளை ஆறுதல் வெற்றிக்காக களமிறங்க உள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் கடைசி போட்டியில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விலகி ஓய்வு எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசியக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் என்று சுப்மன் கில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
இதனால் டி20 தொடருக்கு முன்பாக சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுக்க கம்பீர் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் சுப்மன் கில்லுக்கு பதிலாக துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். இதனால் சுப்மன் கில்லுக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயரை தயார் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
அதேபோல் மாற்று தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியுடன் நீண்ட காலமாக பயணித்தாலும், ஜெய்ஸ்வால் இதுவரை ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார். 2027 உலகக்கோப்பை தொடருக்கு தயார் செய்யும் வகையில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஜெய்ஸ்வாலுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளில் அவர் மிகப்பெரிய சாதனைகளை படைத்தால், ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவும் விரைவாக எடுக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2வது ஒருநாள் போட்டிக்கு முன்பாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரமாக ஆலோசனை நடத்தினார்.
இதனால் ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்ட சூழலில், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க கம்பீர் முடிவு எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல் ரோகித் சர்மா திடீரென ஓய்வை அறிவித்தால், அவரது இடத்தில் விளையாடுவதற்கு ஜெய்ஸ்வால் தயாராக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.