பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படாது எனவும், அவர் கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சர்ஃபராஸ் கானுக்கு நீண்ட காலத்திற்கு பின்பு தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. சுமார் ஏழு ஆண்டு காலமாக உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து வந்த சர்ஃபராஸ் கான், பொறுமையாக இருந்து இந்திய அணியில் தனது இடத்தை பெற்று இருக்கிறார். இந்த நிலையில் அவரை அணியில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார். சர்ஃபராஸ் கானுக்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் ரன் குவிக்கவில்லை என்றால் அதன் பின் அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என கூறி இருக்கிறார்.
உள்ளூர் போட்டிகளில் நிறைய சதங்களை அடித்து இந்திய அணியில் தனது இடத்தை திறமையின் அடிப்படையில் பெற்று இருக்கிறார். எனவே, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடும் முன்பே அவரை ஒதுக்குவது சரியல்ல என்று கூறி இருக்கிறார் கங்குலி.
இது பற்றி சவுரவ் கங்குலி பேசுகையில், "சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு வேறு எதை வேண்டுமானாலும் நாம் பேசலாம். அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல், "அவர் ஆட மாட்டார்" என்று நாம் சொல்லக்கூடாது. அவர் இந்த தொடரில் முதலில் தோல்வி அடையட்டும். அதன்பின் நாம் பேசலாம். அவர் உள்ளூர் போட்டிகளில் நிறைய சதங்களை அடித்து இருக்கிறார். இந்திய அணியில் திறமையின் அடிப்படையில் இடம் பெற்று இருக்கிறார். யாரும் அவரது வாய்ப்புக்காக உதவவில்லை." என்றார்.
மேலும், "அவர் இந்த தொடரில் பேட்டிங் செய்வதற்கு முன்பே அவரை ஒதுக்கித் தள்ள முடியாது. அவர் சில போட்டிகளில் ஆடிய பின் அவரது நிலையை பற்றி நாம் முடிவு செய்யலாம். அவர் நிச்சயமாக பேட்டிங் செய்ய தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். அவர் தனது திறமையை பேட்டிங்கில் காட்டிய பின் நாம் அவர் எந்த அளவுக்கு நன்றாக ஆடுகிறார் அல்லது மோசமாக ஆடுகிறார் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அதை செய்யாமல் அவர் மீது நாம் ஒரு தீர்ப்பை சொல்ல முடியாது." என்றார் சவுரவ் கங்குலி.