சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் பந்தில் ஆட்டமிழக்க இருந்த நிலையில் மூன்றாம் நடுவரின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். மூன்றாம் நடுவர் மட்டும் இல்லை என்றால் ஆஸ்திரேலிய அணி ஏமாற்றி ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கும்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் கடந்த காலங்களில் ஸ்லிப்பில் கேட்சை பிடித்து விட்டதாக கூறி ஆஸ்திரேலிய அணி பல நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது. இதனால் இந்திய அணி பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதை அடுத்து களமிறங்கிய ராகுல் நான்கு ரன்களிலும், ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 17 ரன்களுக்கு இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்து இந்திய அணியை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினர். இந்த சூழலில் தான் விராட் கோலி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற ஸ்மித், லாபஸ்செனிடம் கேட்ச் ஆனார். ஆனால் பந்து தரையை ஒட்டி வந்ததால் ஸ்மித் அதனை பாய்ந்து பிடித்தார்.
எனினும் ஸ்மித் வெறும் இரண்டு விரலை மட்டுமே வைத்து கேட்சை பிடிக்க முயன்றார். அப்போது பந்து அவரின் கையை மீறி வெளியே வந்த போது தரையில் பட்டு மேலே வந்த போது லாபஸ்சென் அதனை பிடித்தார். ஆனால் ஆஸ்திரேலிய அணி வழக்கம்போல் தாங்கள் கேட்ச் பிடித்து விட்டதாக நாடகம் ஆடினர்.
எனினும் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது நம்பிக்கை கொள்ளாத நடுவர்கள் இந்த வீடியோவை ரீப்ளே செய்து பார்த்தனர். அப்போது ஸ்மித் கேட்ச் பிடிக்க முயன்ற போது பந்து அவர் கையை மீறி தரையில் பட்டு லாபஸ்செனிடம் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து நடுவர்கள் இதற்கு நாட் அவுட் வழங்கிவிட்டனர்.
எனினும் இதனை கொஞ்சமும் ஏற்காத ஆஸ்திரேலிய ஊடகங்களும் ரசிகர்களும் இது அவுட்டுதான் என்றும் புலம்பி வருகின்றனர். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அழுகுணி குழந்தை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் தான் அழுகுணி ஆட்டம் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.