அடிலெய்ட் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக அடிலெய்ட் நகரில் வரும் ஆறாம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் அடிலெய்ட் நகரில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இதுவரை விளையாடிய 12 போட்டியில் ஒன்றில் மட்டும் தான் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். இதனால் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று பலரும் கணித்திருந்தார்கள். இந்த நிலையில் அடிலெய்ட்டில் பயிற்சி செய்து கொண்டு இருந்த போது ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரரான ஸ்மித்துக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் வலியால் துடித்து பயிற்சியில் பங்கேற்காமல் பாதியிலே சென்றார். பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஸ்மித் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 760 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் ஐந்து அரை சதம் அடங்கும். ஆஸ்திரேலியா அணியின் முக்கியத்தூணாக ஸ்மித் விளங்கும் நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தை கலக்கமடைய செய்திருக்கிறது.
வலைப்பயிற்சியில் மார்னஸ் லாபஸ்சேன் பந்தை எரிந்து கொண்டிருந்தபோது அது ஸ்மித்தின் கையை தாக்கியது. இதனால் அவர் வலியால் துடித்தார். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவு தெரிந்த பிறகு அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா மாட்டாரா என்பது தெரியவரும்.
இந்திய அணி ஏற்கனவே கில்லுக்கு இதுபோல் பயிற்சி செய்யும் போது கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத சூழல் ஏற்பட்டது. தற்போது அதேபோல் ஒரு காயம் ஸ்மித்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சு காயம் காரணமாக விலகி இருக்கும் நிலையில் தற்போது ஸ்மித்துக்கும் காயம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.