பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க நடத்திய போராட்டம் ஹாலிவுட் படத்தையே மிஞ்சும் அளவுக்கு விறுவிறுப்பாக அமைந்தது. ஒவ்வொரு பந்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியது.
டி20 கிரிக்கெட் போட்டியில் கூட இந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்காது. இதனால் தான் ரசிகர்கள் டெஸ்ட் போட்டியை 147 ஆண்டுகளாக போற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஃபாலோ ஆனை தவிர்க்கும் போது சிராஜ் செய்த ஒரு செயல் கவாஸ்கரை கோபமடைய செய்தது.

களத்தில் ஜடேஜாவும், சிராஜும் எட்டாவது விக்கெட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆட்டத்தின் 62 வது ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என இருந்தது. பாலோ ஆனை தவிர்க்க 46 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் பேட் கம்மின்ஸ் பந்தை அடித்த சிராஜ் ரன் ஓட வாய்ப்பு இல்லாத நிலையில் ரன் ஓட தொடங்கினார்.
ஆனால் இதனை கவனித்த ஜடேஜா வேண்டாம் என ரன்னை தடுத்துவிட்டார். இதை அடுத்து சிராஜ் மீண்டும் கிரீசுக்கு சென்று விட்டாலும் பேட் கம்மின்ஸ் பந்தை எடுத்து சரியாக அடித்திருந்தால் சிராஜ் அவுட் ஆகி இருப்பார். இதனால் சிராஜ் ஜடேஜாவிடம் சென்று ஏன் ரன் ஓட மறுத்துவிட்டாய் என கோபமாக கேட்டார்.
இதில் ஜடேஜா மீது தவறே இல்லை. இந்த நிலையில் இந்த காட்சியை நேரலையில் கண்ட கவாஸ்கர் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த போது சிராஜை கடுமையாக சாடினார். அப்போது பேசிய கவாஸ்கர், களத்திற்கு நடுவே ஏன் இப்போது தேவையில்லாமல் சிராஜ் ஜடேஜாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இன்னும் ஒரு பந்து எஞ்சி இருக்கிறது. சிராஜின் வேலை விக்கெட் விழாமல் ஒரு முனையில் பேட்டிங் செய்வது மட்டும்தான். அந்த பந்தில் ரன் அடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் சிராஜ் வீரரிடம் வந்து அடித்து விட்டு சுலபமாக எடுக்கலாம் என நினைக்கின்றார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு கொஞ்சமாக கிரிக்கெட் அறிவு இருக்க வேண்டும்.
நீங்கள் பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது வீரர் என்பதை மறந்து விடாதீர். உங்களுடைய முழு நினைப்பு எல்லாம் அணியை சுற்றி இருக்க வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலையில் சிங்கிள் எடுக்க இவ்வளவு எடுத்திருக்கக் கூடாது என்று காவாஸ்கர் கடுமையாக சாடினார். இதற்குப் பிறகு ஏற்பட்ட கவன சிதைவு காரணமாக சிராஜ், ஜடேஜா இருவருமே ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.