முட்டாள்தனமான முடிவை எடுக்காதீங்க! 4வது டெஸ்ட் குறித்து இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்
மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டேவான டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இந்திய அணியில் பிளேயிங் லெவன் என்ன என்பது குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
அஸ்வின் ஓய்வு பெற்றுள்ள நிலையில் வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நிதிஷ்குமார் ரெட்டி நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.எனினும் இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணி நிதிஷ்குமார் ரெட்டியை நீக்கும் முடிவு குறித்து யோசிக்கவே கூடாது. இந்திய அணியின் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் அவர்தான். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெறும் இரண்டு வேக பந்துவீச்சாளர் மற்றும் நிதிஷ் ரெட்டியை வைத்து இந்தியா விளையாடுவது சரியான விஷயமாக இருக்காது.
இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் பயன்படுத்தப்பட்ட அதே பிளேயிங் லெவனை வைத்து விளையாடும் என நினைக்கின்றேன். இதேபோன்று வேகபந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் அணியில் தொடர்வார் என நினைக்கிறேன். அவருக்கு பதில் ஹர்ஷித் ராணாவை சேர்ப்பதும் தவறான முடிவாகும். ஃபாலோ ஆனை தவிர்த்து, அணியைக் காப்பாற்றிய நபரை எதற்காக நீங்கள் நீக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதேபோன்று கவாஸ்கர், ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கே எல் ராகுலை மூன்றாவது வீரராகவும் சுப்மன் கில்லை நடுவரிசையிலும் களமிறங்க கவாஸ்கர் அறிவுறுத்தி இருக்கிறார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என இந்தியா நம்புவதால் நிதிஷ்குமார் ரெட்டியை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை சேர்க்க யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், கவாஸ்கர் அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications