மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆட்டமிழந்து வெளியேறியபோது, விராட் கோலி ரசிகர்களை நோக்கி கையசைத்தது அவரது 'ஓய்வு அறிவிப்பு' எனப் பரவிய வதந்திகளுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "கோலி அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுப்பவர் அல்ல; அவரது சாதனைப் பட்டியலைப் பாருங்கள்" என்று கூறிய கவாஸ்கர், கோலியின் அந்தச் செயலுக்கு ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார்.
பெர்த்தில் ஒரு டக், அடிலெய்டில் ஒரு டக்... தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த விராட் கோலி, பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், அடிலெய்டில் ஆட்டமிழந்த பிறகு, அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்து விடைபெற்றது, சமூக வலைதளங்களில் "கோலி ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்" என்ற வதந்தியைத் தீயாகப் பரப்பியது.

இந்தச் சூழலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்த வதந்திகளைப் பகிரங்கமாக மறுத்து, கோலிக்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
கோலியின் கையசைவு குறித்துப் பேசிய கவாஸ்கர், அது ஓய்வுக்கான அடையாளம் அல்ல என்பதைத் தெளிவாக விளக்கினார். "கோலி ஆட்டமிழந்து வெளியேறியபோது, அவருக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். அந்த மைதானத்தில் பெரும்பான்மையானவர்கள் ஆஸ்திரேலிய ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வெளிநாட்டு வீரருக்கு, அதுவும் எதிரணி வீரருக்கு இப்படி ஒரு மரியாதை கொடுப்பது, கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதாகும். அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டு, கோலி தனது நன்றியைத் தெரிவித்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர் எங்கே சென்றார் என்று பாருங்கள். வீரர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குச் செல்லும் வழியில்தான் 'மெம்பர்ஸ் ஸ்டாண்ட்' உள்ளது. அங்குதான் முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் போன்ற முக்கியஸ்தர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டுதான் அவர் கையசைத்தார். இதைத் தாண்டி அதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கோலியின் ஓய்வு குறித்த விவாதங்களுக்குப் பதிலளித்த கவாஸ்கர், "விராட் கோலி அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் ரகத்தைச் சேர்ந்தவர் அல்ல. 0, 0 என இரண்டு போட்டிகளில் ரன் எடுக்கவில்லை என்பதற்காக அவர் ஓய்வு பெறுவார் என நினைக்கிறீர்களா? நிச்சயம் இல்லை. அவர் எப்போதுமே உச்சத்தில் இருந்துதான் ஓய்வு பெற நினைப்பார்" என்று உறுதியுடன் கூறினார்.
கவாஸ்கர் மேலும் கூறுகையில், "அந்த மனிதன் 14,000-க்கும் மேற்பட்ட ஒருநாள் ரன்கள், 52 ஒருநாள் சதங்கள், 32 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். ஆயிரக்கணக்கான ரன்களைக் குவித்த ஒரு வீரருக்கு, இரண்டு தோல்விகள் ஏற்படத்தான் செய்யும். இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். அவருக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை மீதமுள்ளது. சிட்னியில் நிச்சயம் ஒரு பெரிய இன்னிங்ஸை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்" என்றார்.
2027 உலகக் கோப்பையிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நிச்சயம் விளையாடுவார்கள் என்றும் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார். கோலியின் இந்தச் செயல், அடிலெய்டு மைதானத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்புக்கும், பல ஆண்டுகளாகத் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு வழியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்றும், இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.