மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கு முன் இந்திய அணி எந்தப் பயிற்சி போட்டியிலும் விளையாடப் போவதில்லை என முடிவு எடுத்து உள்ளது. முன்னதாக இந்தியா ஏ அணிக்கு எதிராக இந்திய டெஸ்ட் அணி ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாடும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், அந்தப் போட்டியும் பின்னர் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக இந்திய வீரர்கள் மூன்று நாள் வலைப் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த முடிவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இந்த முடிவை எடுத்தவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்வார்கள் எனவும் அவர் எச்சரித்து இருக்கிறார்.

இது பற்றி அவர் ஒரு பத்திரிக்கையில் விரிவாக எழுதி இருக்கிறார். "ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நின்று அவரது பேட்டின் நடுப்பகுதியில் பந்து படுவது போன்ற ஒரு உணர்வு வேறு எதிலும் கிடைக்காது. எவ்வளவு வலைப் பயிற்சி செய்தாலும் ஆடுகளத்தில் நின்று பந்தை சந்திக்கும் போது பேட்டின் வேகம் மற்றும் ரன் குவிக்கும் போது கிடைக்கும் உணர்வு வலைப் பயிற்சியில் கிடைக்காது."
"இதற்கு முன் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய அணி தான் விளையாடும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் எப்போதும் தோல்வி அடைந்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அது போன்ற சூழ்நிலையில் கடந்த இரண்டு முறை அதன் பின்பு போராடி தொடரை வென்று இருக்கிறது. அதனால் தான் பயிற்சிப் போட்டி எப்போதும் முக்கியம்."
"அது இந்தியா ஏ அணிக்கு எதிராக இருந்தாலும் முக்கியமானது தான். பயிற்சிப் போட்டியில் இந்திய ஏ அணியின் பந்து வீச்சாளர் பேட்ஸ்மன்களுக்கு அடிபட்டு விடப் போகிறதோ? என்று எண்ணி பந்து பவுன்ஸ் ஆகாமல் வீசுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால் வலைப் பயிற்சியில்தான் வீரர்களுக்கு காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஏனெனில், வலைப் பயிற்சிக்கான பிட்ச் எப்போதும் போட்டிக்கான பிட்ச் போல தயாரிக்கப்படாது."
"அங்கு பந்துச்சாளர்களும் நோ பால் வீசுவதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். மேலும், வலைப் பயிற்சியில் ஒரு பேட்ஸ்மேன் தான் இரண்டு, மூன்று முறை அவுட் ஆனாலும் மீண்டும் பேட்டிங் ஆடலாம் என்ற எண்ணத்தில் இருப்பார். போட்டி சூழ்நிலையில் இருக்கும் பதற்றமோ, அழுத்தமோ இருக்காது. ஒரு போட்டியில் விளையாடும் போது கிடைக்கும் அனுபவம் வலைப் பயிற்சியில் கிடைக்காது."
"பந்துவீச்சாளர்களுக்கும் வலைப் பயிற்சியில் சரியான ஓட்டம் மற்றும் நோ பால் வீசாமல் இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்காது. ஒரு போட்டியில் விளையாடும் போது தான் என்ன லைன் மற்றும் லென்த்தில் பந்து வீச வேண்டும் என்பது புரியும். வலைப் பயிற்சியில் அந்த புரிதல் கிடைக்காது. யார் இந்த பயிற்சி போட்டியையும், ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் போட்டியையும் ரத்து செய்தார்களோ, அவர்களுக்கு இதன் விளைவு என்ன என்பது புரிய வரும்."
"மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இடையே ஏழு நாட்கள் உள்ளது. அப்போது இரண்டு நாள் பயிற்சிப் போட்டி ஒன்றை நடத்தலாம். அதன் மூலம் சரியாக ரன் குவிக்காத, விக்கெட் வீழ்த்தாத வீரர்களுக்கு தங்கள் ஃபார்மை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். கடைசி இரண்டு போட்டியில் தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என மற்ற வீரர்களும் அணி நிர்வாகத்திற்கு உணர்த்த முடியும்."
"சிலர் ஐந்து போட்டிகளில் ஆடுவதால் பணிச் சுமை ஏற்படும் என்பதால் பயிற்சிப் போட்டி ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். ஒரு டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிந்தாலும் இங்கே வீரர்களுக்கு பணிச் சுமை அதிகம் என்கிறார்கள். நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற பின்னர் மும்பையில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்."
"நான் ஒரு கணக்கை சொல்கிறேன். ஆஸ்திரேலியாவில் நவம்பர் 12 முதல் ஜனவரி 7 வரை சுமார் 57 நாட்கள் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் ஐந்து போட்டிகளும் ஐந்து நாட்களும் நடைபெறுகிறது என வைத்துக் கொண்டால், மொத்தம் 25 நாட்கள். இடையே இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி விளையாடினால் மொத்தம் 27 நாட்கள். மொத்தம் 57 நாட்களில் 27 நாட்கள் தான் இந்திய அணி விளையாடப் போகிறது. இது அதிக பணிச் சுமையா? ஆஸ்திரேலியாவில் எல்லாம் சரியாக சென்றால் நல்லது. இல்லையெனில் இது மிக, மிக நீண்ட தொடராக அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக இந்திய ரசிகர்களுக்கு." என்று எச்சரித்து இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.