மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். அதேபோல் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவத்தை ரசிகர்களுக்கு உணர்த்தும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இன்னும் 2 மாதங்களில் தொடங்கவுள்ளது. கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று புதிய வரலாறு படைத்தது.

அதிலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தவே முடியாது என்று சொல்லப்பட்ட காபா கோட்டையை தகர்த்து ரஹானே தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்ததை ரசிகர்களால் எளிதாக மறக்க முடியாது. இந்திய அணிக்கு எதிரான அடுத்தடுத்து 2 முறை சொந்த மண்ணில் வீழ்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான், ஆஸ்திரேலியா அணி இம்முறை ஆஷஸ் தொடருக்கு நிகராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை திட்டமிட்டுள்ளது.
சுமார் 3 மாதங்கள் நடக்கவுள்ள இந்த தொடர், வீரர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வுக்கு பின் அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் சரியாக அமையவில்லை. அதேபோல் மிடில் ஆர்டரிலும் சரியான வீரர்கள் கொண்டு வரப்படவில்லை.
அதனால் மீண்டும் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது. வெளிநாடுகளை பொறுத்தவரை இந்திய அணி எப்போதும் தாமதமாகவே ஃபார்முக்கு திரும்பும். தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் முதல் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணியுடன் எந்த பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடவில்லை.
அதேபோல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு இடையிலும் நல்ல இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்த திட்டம் திரும்பவும் வாய்ப்புகள் உள்ளது. அனுபவமில்லாத இளம் வீரர்களுக்கு வெளிநாடுகளில் உடனடியாக ரன் குவிக்க கடினமாக இருக்கும். தென்னாபிரிக்காவில் ஜெய்ஸ்கால் பேட்டிங் செய்ய முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 700 ரன்களை குவித்து அசத்தினார்.
இதனால் நிச்சயம் இந்தியா - ஆஸ்திரேலியா ஆணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளிலும் மிகச்சிறந்த இளம் திறமையாளர்கள் இருப்பதால், சுவாரஸ்யம் மிக்க டெஸ்ட் தொடராக அமையும். என்னை பொறுத்தவரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் பலரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரானவே கணிப்புகளை வெளியிட்டு இந்திய வீரர்களின் மன உறுதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவாஸ்கரின் கணிப்பு அமைந்துள்ளது.