சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆடி முடித்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. அப்போது முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரை அவமரியாதை செய்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளின் முன்னாள் வீரர்களான ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களை சேர்த்தே பார்டர் - கவாஸ்கர் டிராபி என இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அழைக்கப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை எப்போதும் இவர்கள் இருவரும் துவக்கி வைப்பவர்களாக உள்ளனர்.

அதே போல கோப்பை வெல்லும் அணிக்கு கோப்பை வழங்குவதும் இவர்கள்தான். இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 1 என வென்றது. சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதை அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு பார்டர் - கவாஸ்கர் கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆலன் பார்டர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-இடம் கோப்பையை அளித்தார். அப்போது சுனில் கவாஸ்கர் பவுண்டரி எல்லைக்கு வெளியே நின்று இருந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கோப்பையை வழங்குவதற்கு சுனில் கவாஸ்கரை அழைக்கவில்லை. அதுதான் சர்ச்சையாக மாறி உள்ளது. அது பற்றி பேசிய சுனில் கவாஸ்கர், "நானும் அங்கே இருந்து இருக்க வேண்டும். இது பார்டர் - கவாஸ்கர் டிராபி. இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைப் பற்றியது. நான் இங்கே மைதானத்தில் தான் இருக்கிறேன். ஆஸ்திரேலியா வென்றதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் வென்றார்கள்."
"ஆனால், நான் இந்தியன் என்பதால் கோப்பையை வழங்க அழைக்கப்படவில்லை. அந்தக் கோப்பையை எனது நண்பர் ஆலன் பார்டர் உடன் சேர்ந்து வழங்கி இருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்." என்றார் சுனில் கவாஸ்கர். அவரது ஆதங்கம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆனால், இது பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாக அதிகாரிகள் வேறு மாதிரியாக திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றால் ஆலன் பார்டர் கோப்பையை அளிப்பார். ஒருவேளை இந்திய அணி வென்றால் கவாஸ்கர் கோப்பையை வழங்குவார் என திட்டமிடப்பட்டது என கூறப்படுகிறது. அதனால் தான் ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வழங்கிய போது சுனில் கவாஸ்கர் அழைக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.