இந்தூர்: இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது, இந்தூரில் இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் ஒரு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இழிவான செயலுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் ஆவேசத்துடன் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட அந்த நபர் "கழிவறையில் வழுக்கி விழுந்ததால்" கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
2025 மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தூரில் தங்கியிருந்த இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனைகள், வியாழக்கிழமை அன்று காலையில் தங்களது ஹோட்டலில் இருந்து அருகிலுள்ள கஃபே-க்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், அவர்களைப் பின்தொடர்ந்து வந்து, இரு வீராங்கனைகளையும் "முறையற்ற வகையில் தொட்டு" சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக வீராங்கனைகள் தங்களது பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்தனர். காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்ட பிறகு, குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச காவல்துறையின் தகவல்படி, குற்றவாளியின் பெயர் அகில் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், தனது கடும் கோபத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். இது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இந்தியா டுடே"வுக்குப் பேட்டியளித்த கவாஸ்கர், "நாம் 'அதிதி தேவோ பவ' (விருந்தினர்கள் கடவுளுக்குச் சமம்) என்ற கொள்கைக்குப் பெயர் பெற்றவர்கள். இப்படி ஒரு செய்தியைக் கேட்பது மிகவும், மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார்.
"இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு கொடூரமான சம்பவம். சட்டம் அதன் கடமையைச் செய்யும். ஆனால், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவனைப் பூட்டி, சாவியைத் தூக்கி எறிந்துவிட வேண்டும். அதுதான் ஒரே வழி என்று நான் நினைக்கிறேன். அவனைப் பூட்டி சாவியைத் தூக்கி எறியுங்கள்" என்று தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே மத்திய பிரதேச காவல்துறையின் சிறப்பு கவனிப்பால் அகில் கானின் ஒரு கை மற்றும் ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இது மிகவும் கண்டிக்கத்தக்க, ஆனால் ஒரு தனிப்பட்ட சம்பவம். இந்தியா தனது விருந்தோம்பலுக்கும், அக்கறைக்கும் பெயர் பெற்றது. இதுபோன்ற சம்பவங்களில் நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறோம்."
"குற்றவாளியை உடனடியாகக் கைது செய்த மாநில காவல்துறைக்கு (மத்தியப் பிரதேசம்) நாங்கள் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். சட்டம் அதன் கடமையைச் செய்து குற்றவாளியைத் தண்டிக்கட்டும். தேவைப்பட்டால், பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த எங்களது பாதுகாப்பு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்வோம்" என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உலகக் கோப்பையில், இந்தூரில் நடைபெற்ற தனது கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியுடன் அரையிறுதியில் மோத ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.