மும்பை : இந்திய டி20 அணியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக சூர்யகுமார் யாதவ் நிரந்தர கேப்டன் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை நெருங்கும் நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக யார் செயல்படுவார்? என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.
டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என பொதுவாக சொல்லப்பட்டாலும் கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோஹித் சர்மா இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதுவரை நடந்த டி20 தொடர்களில் பல வீரர்கள் அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா என நீளும் அந்த கேப்டன் வரிசையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் பதவியை பிடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அவர் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் காயத்தில் சிக்கினார். அவர் அடுத்து ஐபிஎல் தொடர் வரை போட்டிகளில் ஆடுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடர் துவங்குகிறது. அதற்குள் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து நூறு சதவீதம் குணமடைந்து விடுவாரா? என்ற சந்தேகமும் உள்ளது. காயத்தில் இருந்து மீண்டவர் நீண்ட ஐபிஎல் தொடரில் பங்கேற்று விட்டு, அடுத்த சில நாட்களில் நீண்ட டி20 தொடரில் பங்கேற்பது என்பது சவாலான விஷயம். அதனால், பாண்டியா அணியில் இடம் பெறுவதை கூட உறுதிப்படுத்த முடியாத நிலைமை தான் இருக்கிறது.
இந்த நிலையில், ரோஹித் சர்மாவை டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டு இருக்கிறது பிசிசிஐ. அவரையே கேப்டனாக டி20 உலகக்கோப்பையில் அணியை வழிநடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அவர் டி20 அணியை இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு ஒதுங்கும் மனநிலையில் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் அடுத்து நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் அணியை வழிநடத்த அதிக வாய்ப்பு உள்ளது. ரோஹித் சர்மா, பாண்டியா டி20 அணிக்கு திரும்பாத பட்சத்தில் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆன சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா டி20 உலகக்கோப்பையை சந்திக்கக் கூடும்.