கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் 168 ரன்கள் என்ற இலக்கை இந்தியா தற்காத்துக் கொள்ளாது என எதிர்பார்க்கப்பட்டபோது வாஷிங்டன் சுந்தர்,அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் தங்களுடைய அபார பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலிய அணியை 119 ரன்களில் சுருட்டினர்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், முதலில் என்னுடைய பேட்ஸ்மேன்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைவருமே நன்றாக விளையாடினார்கள். குறிப்பாக அபிஷேக் ஷர்மா மற்றும் கில் ஆகியோர் பவர் பிளேவை சிறப்பாக பயன்படுத்தினார்கள்.
அவர்கள் விளையாடும் போது இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் எல்லாம் அடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் புத்திசாலித்தனமாக விளையாடினார்கள். இந்த ஆடுகளம் இப்படி தான் செயல்படும் என்ற தகவல்களை நாங்கள் பெற்றோம். இந்த வெற்றிக்கு பேட்ஸ்மேன், பவுலர்ஸ் என இருவரும் ஒருங்கிணைந்து விளையாடியதே காரணம்.
ஆல்ரவுண்டர்கள் அணியில் குறைந்தபட்சம் இரண்டு ஓவர்கள் ஆவது வீசவேண்டும் என்பதில் நானும் கௌதம் கம்பீரும் தெளிவாக இருக்கின்றோம். இன்று கூட பாருங்கள், ஆல் ரவுண்டர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தார்கள். இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் வீசக்கூடிய வீரர்கள் இருப்பது அணிக்கு எப்போதுமே நல்ல விஷயம் தான்.
எங்களுக்கு தேவைப்பட்டால் அவர்களிடமிருந்து நான்கு ஓர்களை கூட நாங்கள் எடுத்துக் கொள்வோம். இன்று பனிப்பொழிவும் கொஞ்சம் இருந்தது. ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் பௌலர்கள் கள சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் பந்து வீசும் விதம் சிறப்பாக இருந்தது. ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருப்பதால் எங்கள் அணியில் எப்படி வேண்டுமானாலும் நாங்கள் யுத்தியை மாற்றிக் கொள்ள உதவிகரமாக இருக்கின்றது.
ஒவ்வொரு முறையும் வீரர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள். அதுவே வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. கடைசி டி20 போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.