கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் சிக்ஸர்கள் அடித்து ஒரு சாதனை படைத்திருக்கிறார். எப்போதுமே பேட்டிங்கில் அதிரடி காட்டக் கூடியவர். ஆனால் நடப்பாண்டில் அவருடைய சராசரி வெறும் 11 என்ற அளவில் இருந்தது.
இதனால் சூரியகுமார் யாதவ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தாம் அணியில் ஒரு முக்கியமான வீரர் தான் என்பதை காட்ட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா, கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 35 ரன்கள் சேர்த்திருந்தது.

அபிஷேக் ஷர்மா 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த போது இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். தான் எதிர்கொண்ட முதல் சில பந்துகளில் சூரியகுமார் யாதவ் சிக்சர் அடித்து அசத்தினார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 18 ஓவர்களாக மாற்றப்பட்டது.
இதை அடுத்து மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் சூரியகுமார் யாதவ் அதிரடி காட்டி மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர் அடித்தார். இதன் மூலம் சூரியகுமார் யாதவ் சர்வதேச t20 கிரிக்கெட்டில் ஒரு சாதனை படைத்திருக்கிறார். அதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்ஸர்கள் அடித்த ஐந்தாவது வீரர் மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 205 உடன் முதலிடத்தில் உள்ளார். 5வது இடத்தில் சூரிய குமார் யாதவ் இருக்கின்றார். சூரியகுமார் யாதவ் இந்த மைல்கல்லை 86வது இன்னிங்ஸ்லே எட்டிருக்கிறார். சூரியகுமாரியாதவ் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அதிரடி காட்டி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது.
எனினும் மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டு இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் சூரியகுமார் பல மாதங்கள் கழித்து இப்போதுதான் அதிரடி காட்டுவதாகவும், ஆனால் அது மழைக்கு பிடிக்கவில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர்.