கேன்பரா: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஃபார்மில் திணறி வருகிறார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த நிலையில், சூர்யகுமாரின் ஃபார்ம் அணிக்குள் பல கேள்விகளை எழுப்பும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.
2025-ம் ஆண்டில், 35 வயதான சூர்யகுமார் யாதவ் இந்தியாவிற்காக 11 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி, வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 105-ஐ ஒட்டியே உள்ளது. ஆசியக் கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்திருந்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக சரியாக செயல்படவில்லை என்பதை அவரே முதலில் ஒப்புக்கொள்வார்.

2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 717 ரன்களைக் குவித்து பட்டையைக் கிளப்பிய சூர்யகுமார், சர்வதேச டி20 போட்டிகளில் அதே ஃபார்மைத் தொடர முடியாமல் திணறி வருகிறார். இந்தச் சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், அவரது ஃபார்மை மீட்டெடுக்க ஒரு முக்கியமான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து 'ஜியோ ஸ்டார்' நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக் நாயர், "இந்த ஆஸ்திரேலியத் தொடர் ஒரு சுவாரஸ்யமான சூழலை உருவாக்கியுள்ளது. அணி வெற்றிகளைப் பெறும்போது, தனிப்பட்ட வீரர்களின் செயல்திறன் பெரிதாகப் பேசப்படாது. ஆனால், முடிவுகள் சாதகமாக இல்லாதபோது கேள்விகள் எழும். இந்திய டி20 அணியின் கேப்டனாகவும், நீண்ட காலம் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் வீரராகவும் இருந்த சூர்யகுமார், 3-வது இடத்தில் இறங்கி நீண்ட காலமாகப் பெரிய ஸ்கோர் அடிக்காமல் இருப்பது, அணிக்குள் நிச்சயம் ஒரு சுய பரிசோதனையை உருவாக்கும்" என்றார்.
மேலும் அவர், "சூர்யகுமாரின் திறமையும், தாக்கத்தை ஏற்படுத்தும் திறனும் நமக்குத் தெரியும். உண்மையில், ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் பவுன்ஸ் மற்றும் வேகம், அவரது பேட்டிங் ஸ்டைலுக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும். ஆனால், அவரது தற்போதைய ஆட்டம் அவரது உண்மையான திறமையை வெளிப்படுத்தவில்லை. எனவே, மிகப்பெரிய கேள்விகள் அவருக்குள்ளிருந்தே எழும்" என்று அபிஷேக் நாயர் குறிப்பிட்டார்.
2025-ம் ஆண்டில் இந்தியாவிற்காக 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 47* ரன்களே இந்த ஆண்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இந்திய அணி தற்போது "அச்சமற்ற அணுகுமுறை"யுடன் விளையாடி வருகிறது. சூர்யகுமாரின் தொடர் தோல்விகளுக்கு, அவர் விளையாடும் அதிக ரிஸ்க் கொண்ட ஆட்டமே காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்திய கேப்டன் தனது ஆட்டத்தில் சற்று நிதானம் காட்டி, நிலைத்தன்மை பெற்ற பிறகு பந்துவீச்சாளர்களைத் தாக்குவது அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக, அணியில் கேப்டன் பதவியை பிடிக்க சுப்மன் கில் காத்திருப்பது, சூர்யகுமார் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை இந்தியா தக்கவைக்க வேண்டுமென்றால், சூர்யகுமார் யாதவ் மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்புவது மிகவும் அவசியம்.
இந்தச் சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று கேன்பராவில் தொடங்கும் முதல் டி20 போட்டி, சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகக் பார்க்கப்படுகிறது.