என்ன நடந்தது?
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு நாட்களில் சிறப்பாக ஆடி வந்தது. முதல் இன்னிங்க்ஸில் 53 ரன்கள் முன்னிலையும் பெற்றது. ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் யாரும் எதிர்பாராத வகையில் விக்கெட் சரிவை சந்தித்தது.
படுதோல்வி
இரண்டாம் இன்னிங்க்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியுடன், ஷமி காயமும் இந்திய அணியை பாதித்துள்ளது.
ஷமி காயம்
முகமது ஷமி முதல் இன்னிங்க்ஸில் அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார். ஆனாலும், அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் அவர் பேட்டிங் செய்த போது பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்சரில் சிக்கி முட்டியில் காயம் ஏற்படுத்திக் கொண்டார்.
கையை தூக்கவே முடியவில்லை
அவர் மீண்டும் பேட்டிங் செய்ய முயன்றாலும் அவரால் கையை தூக்கவே முடியவில்லை. இதை அடுத்து இந்தியா அவர் களத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் இரண்டாம் இன்னிங்க்ஸில் பந்து வீசவும் இல்லை.
மாற்று வீரர்
ஷமி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு மோசமான காயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படும் நிலையில், இந்திய அணியில் இப்போதே அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நடராஜன்?
நடராஜனை தான் இந்திய அணி நிர்வாகம் மாற்று வீரராக ஆட வைக்க முடிவு செய்துள்ளாக பரபரப்பாக பேசப்படுகிறது. எனினும், ஷமி காயம் குறித்த அறிக்கை வந்த உடனே இது பற்றி முடிவு எடுக்கப்படும். நடராஜனை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
நடராஜன் செயல்பாடு
நடராஜன் ஒருநாள் போட்டியிலும் இதே போல மாற்று வீரராக சேர்க்கப்பட்டு முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை தன் யார்க்கர்களால் மிரட்டினார். டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினார். அவரது யார்க்கர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை அச்சுறுத்தி வருகிறது.
பும்ராவுடன் ஜோடி
இந்த நிலையில், மற்றொரு யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஆன பும்ரா உடன், நடராஜன் இணைந்து டெஸ்ட் போட்டியில் ஜோடியாக பந்து வீசினால் நிச்சயம் ஆஸ்திரேலிய வீரர்கள் நிலைகுலைந்து போவார்கள். அழுத்தத்தை உணர்வார்கள். இதை வைத்தே நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.