மும்பை : உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இன்று நடைபெற இருக்கும் முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்திய அணியில் அனைவரும் இளம் வீரர்களாக இருக்கும் நிலையில், அவர்களில் அதிரடி சிக்ஸர் மன்னன் ரிங்கு சிங் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இளம் வீரர்கள் கொண்ட அணியுடன் களமிறங்க உள்ளது. இந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். அவர் டி20 போட்டிகளில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் என்றாலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை.

அதனால், மற்ற வீரர்களில் யார் சிறப்பாக ஆடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினால் அவர் பெரிய அளவில் ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், கடைசி சில ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்துவது தான் டி20 போட்டிகளில் மிகவும் முக்கியம். அந்த இடத்திற்கு தான் ரிங்கு சிங் மிகப் பொருத்தமான வீரராக இருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்த ரிங்கு சிங், அதன் பின்னும் அதே போன்ற ஆட்டத்தை உள்ளூர் போட்டிகளில் ஆடி இருக்கிறார். சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் கூட அவர் ஒரு போட்டியில் 33 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.
ரிங்கு சிங் வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அப்படி ஒரு இன்னிங்க்ஸ் ஆடினால், அதிக சிக்ஸர்கள் அடித்தால் நிச்சயம் ஸ்கோர் எகிறும். நிச்சயம் இளம் இந்திய அணியால் அனுபவ ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி பழி தீர்க்க முடியும்.