விசாகப்பட்டினம் : இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் மிக கீழ்த்தரமாக நடந்து கொண்டார்.
இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தன் ஓவரில் அதிக ரன்கள் குவித்த நிலையில் அவர் செய்த தவறை குத்திக் காட்டும் வகையில் முகத்துக்கு நேராக சென்று சிரித்து அவரை வெறுப்பேற்றினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி சேஸிங் செய்ய வந்தது. துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்கினர்.
ஆஸ்திரேலிய அணிக்கு மார்கஸ் ஸ்டோனிஸ் முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் ஃபோர் அடித்தார். அடுத்து ஸ்டோனிஸ் பந்து வீச ஓடி வந்த போது கடைசி நொடியில் விலகினார் ஜெய்ஸ்வால். எதிரில் யாரோ நடந்து செல்கிறார்கள் என்பதால் தன்னால் பந்தை பார்க்க முடியவில்லை எனக் கூறி அவர் இவ்வாறு செய்தார். அப்போது ஸ்டோனிஸ் அதை ரசிக்கவில்லை. அவர் முகத்தில் கோபம் தெரிந்தது.
அதற்கு அடுத்து அதே முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஜெய்ஸ்வால் சிக்ஸ் அடித்தார். அடுத்து நான்காவது பந்தில் ஜெய்ஸ்வால் சிங்கிள் ஓடினார். ஒரு ரன் ஓடிய நிலையில் இரண்டாவது ரன் ஓட ஆசைப்பட்ட அவர் ருதுராஜை அழைத்தார். ஆனால், அவர் பாதி தூரம் ஓடி வந்த பின் பீல்டர் பந்தை எடுத்து விட்டதை உணர்ந்து, ருதுராஜை திரும்பி ஓடுமாறு கூறினார்.
ஆனால், அதற்குள் பாதி தூரம் ஓடி வந்த ருதுராஜ் தான் ரன் அவுட் ஆகப் போகிறோம் என்பதை உணர்ந்து ஏமாற்றத்தில் ஆழ்ந்தார். ஆஸ்திரேலியா எளிதாக ருதுராஜை ரன் அவுட் செய்தது. ஜெய்ஸ்வால் செய்த தவறால் அவர் ரன் அவுட் ஆனார்.
அப்போது ஜெய்ஸ்வால் அருகே வந்த ஸ்டோனிஸ் அவரை வெறுப்பேற்றும் விதமாக அவர் முகத்துக்கு நேராக வந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார். அது இயல்பான சிரிப்பு அல்ல. ஒருவரை கேவலமாக நடத்த வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிரித்த சிரிப்பு அது. சில ஆஸ்திரேலிய வீரர்களின் அந்த வழக்கமான திமிரைத் தான் வெளிக்காட்டி இருக்கிறார் மார்கஸ் ஸ்டோனிஸ். தன் ஓவரில் பவுண்டரி அடித்தது, பந்து வீச வந்த போது விலகியது என அனைத்தையும் மனதில் வைத்து அவர் இப்படி நடந்து கொண்டு இருக்கலாம்.
ஜெய்ஸ்வால் இளம் வீரர், அனுபவம் இல்லாத வீரர் என்பதால் இந்த கீழான செயலை அவர் செய்தார். இதே போல, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரரிடம் அவர் செய்வாரா? ஏன் சூர்யகுமார் யாதவிடம் இப்படி செய்வாரா? ஆனால், ஜெய்ஸ்வாலை ஒரு சக மனிதர் என்ற அளவில் கூட நான் கருதவில்லை என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது மார்கஸ் ஸ்டோனிஸ் நடந்து கொண்ட விதம்.