விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த ரிங்கு சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்திய அணியில் தோனி, ஹர்திக் பாண்டியாவிற்கு பின் அது போன்ற அதிரடி ஃபினிஷராக இளம் வீரர் ரிங்கு சிங் உருவாக்கி இருப்பதாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார் முன்னாள் வீரர்கள் புகழ்ந்து தள்ளி உள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்து வரை போட்டியை எடுத்துச் சென்று வெற்றி பெற்றது. கடைசி 5 ஓவர்களில் கச்சிதமாக ஆடிய இளம் வீரர் ரிங்கு சிங் இந்தியஅணியின் வெற்றியை கடைசி பந்தில் உறுதி செய்தார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் குவித்தது. ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21, இஷான் கிஷன் 39 பந்துகளில் 58, சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்களும் எடுத்தனர்.
ரிங்கு சிங் கடைசி 5 ஓவர்கள் இருக்கும் போது களத்துக்கு வந்தார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 54 ரன்கள் தேவையாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் அவுட் ஆன போதும் தவறான பந்துகளை மட்டும் பவுண்டரி அடித்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ரிங்கு சிங். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகளில் 5 ரன்கள் சேர்த்தார் ரிங்கு சிங்.
ஆனால், அடுத்த மூன்று பந்துகளில் அக்சர் பட்டேல் கேட்ச் கொடுத்தும், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர். அதனால் பதற்றம் ஆனது. கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங் அதிரடியாக சிக்ஸ் அடித்தார். ஆனால், அந்த பந்தை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸீன் அபாட் நோ பாலாக வீசியதால் அதன் மூலமே இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ரிங்கு சிங் கடைசி பந்து வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்த நிலையில், வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான அபிஷேக் நாயர் ஆடுகளத்துக்கு சென்று ரிங்கு சிங்கை பாராட்டினார். அதன் பின் பேசிய அபிஷேக் நாயர், "இதை இந்திய அணிக்காக மூன்றாவது முறை செய்கிறார் ரிங்கு சிங். இந்திய அணிக்கு போட்டியை ஃபினிஷிங் செய்யும் தேவை இருந்தது. ரிங்கு சிங் முன் வந்து அதை செய்து இருக்கிறார். அவர் 5 - 7 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால், அப்படி ஆடிய வீரருக்கு உள்ள திறமைகளை வெளிக்காட்டுகிறார்." என்றார்.
மேலும், "அதன் மூலம் ஃபினிஷிங் என்ற கலையை அவர் முழுமையாக கற்றுக் கொண்டார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். தோனி, ஹர்திக் பாண்டியாவிற்கு பின் இந்திய அணிக்கு அந்த வேலையை செய்ய யாரும் இல்லை. ரிங்கு சிங் அந்த இடத்தில் சிறப்பாக பொருந்துகிறார். அவர் ரன் அடிப்பதை விட, அதை எப்படி அடிக்கிறார் என்பது தான் முக்கியம். மிகவும் அமைதியாக, பதற்றமே இல்லாமல் ஆடுகிறார்" என ரிங்கு சிங்கை பாராட்டினார் அபிஷேக் நாயர்.