மும்பை : முன்னாள் இந்திய கேப்டன் தோனி சொன்ன ஒரு அறிவுரையால் இளம் வீரர் ரிங்கு சிங் வாழ்க்கையே மாறி இருக்கிறது.
2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி சிறந்த ஃபினிஷர் என்ற அடையாளத்தை பெற்றார் ரிங்கு சிங். அதைத் தொடர்ந்து இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்பு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆடிய ரிங்கு சிங், தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிங்கு சிங் கடைசி 4 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற நிலையில் அபாரமாக செயல்பட்டு 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அதிலும் கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் அவர் சிக்ஸ் அடித்தார். ஆனால், ஆஸ்திரேலியா நோ பால் வீசியதால் அவரது சிக்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனினும், அவர் எந்த பதற்றமும் இல்லாமல் கடைசி பந்தை ஆடியதை பார்த்து பலரும் அவரை பாராட்டித் தள்ளினர்.
தோனி, ஹர்திக் பாண்டியாவுக்கு பின் இந்திய அணிக்கு ஃபினிஷர் இல்லாமல் இருந்த நிலையில் ரிங்கு சிங் அந்த இடத்தை நிரப்புவார். காரணம், அவர் தோனி போல கடைசி ஓவர்களில் பதற்றம் ஆகாமல் ரன் குவிக்கிறார் என கூறினர். "சிறந்த ஃபினிஷர்" என்ற அடையாளத்தால் தான் ரிங்கு சிங் வாழ்க்கையே மாறி இருக்கிறது. ஆனால், இந்த அடையாளத்தை அவர் பெறவும் தோனியின் அறிவுரை ஒன்று அவருக்கு உதவி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் இடையே தோனியை சந்தித்து பேசும் வாய்ப்பை பெற்ற போது அவரிடம் ஃபினிஷிங் செய்வது குறித்து ஆலோசனை கேட்ட போது, தோனி ஒரு அறிவுரையை கூறி இருக்கிறார். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்க வேண்டும். ரன் குவிக்க நேரடியான ஆட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறார்.
இது பற்றி ரிங்கு சிங் பேசுகையில் தான் தோனி சொன்ன அறிவுரையை அப்படியே பின்பற்றி வருவதாக தெரிவித்தார். தான் அமைதியாக இருப்பதுடன், எதிரணியின் செயல்பாட்டுக்கு எந்த எதிர்வினையும் செய்யாமல் இருப்பதாகவும் ரிங்கு சிங் கூறினார். தோனியின் அந்த அறிவுரையை பத்தோடு, பதினொன்றாக கருதாமல் அதை செயல்படுத்தி சிறந்த ஃபினிஷர் என்ற அடையாளத்தை குறுகிய காலத்தில் பெற்று இருக்கிறார் ரிங்கு சிங்.