மும்பை : இந்திய அணியில் இடம் பெற வேண்டி உள்ளூர் டி20 தொடரில் இமாலய சாதனையை படைத்த இளம் வீரர் ரியான் பராக் பெரும் விரக்தியில் இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வரும் இளம் வீரர் ரியான் பராக், கடந்த 2023 ஐபிஎல் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை. அப்போது ஏழு போட்டிகளில் ஆடி 78 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
அதனால் மோசமான நிலையில் இருந்த ரியான் பராக் எப்படியாவது இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்திய அளவிலான சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் 10 போட்டிகளில் 510 ரன்கள் குவித்து அந்த தொடரிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அது மட்டுமின்றி தொடர்ந்து ஏழு போட்டிகளில் அரைசதம் அடித்து வீரேந்தர் சேவாக் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்து இருந்த சாதனையை பலரால் சமன் செய்ய முடிந்தாலும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதை இந்த தொடரில் முறியடித்தார் ரியான் பராக்.
இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஆடிய ரியான் பராக் அந்த தொடரில் 510 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்தார். அவரது பேட்டிங் சராசரி 85 ஆக இருந்தது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 182 ஆக இருந்தது. இவ்வளவு சிறப்பாக ஆடியதால் எப்படியும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ரியான் பராக் பெயர் இடம் பெறவில்லை. இதை சற்றும் எதிர்பாராத ரியான் பராக் விரக்தி அடைந்து இருக்கிறார்.
அதை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டரில், "வானமாக இருப்பதே நம் வேலை. இடி இடித்து மழை பெய்கிறதா? என பார்ப்பது நம் வேலை அல்ல" எனக் கூறி இருக்கிறார். அதாவது நன்றாக ஆடுவது மட்டும் தான் என் வேலை. அணியில் தேர்வு செய்கிறார்களா? இல்லையா? என்பது என் கையில் இல்லை என சூசகமாக கூறி இருக்கிறார்.