கோல்ட் கோஸ்ட்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி இன்று கோல்ட் கோஸ்டில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி தனது பெஞ்ச் பலத்தைப் பரிசோதிக்கும் விதமாகப் பல மாற்றங்களைச் செய்திருந்தது. அதேபோன்று, இந்தப் போட்டியிலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தக் கடைசி நேர மாற்றங்கள், குறிப்பாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மீண்டும் ஓரங்கட்டப்படலாம் என்ற தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகள் மீது கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

இந்திய அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கி மூன்று டி20 சதங்களை விளாசிய அனுபவ வீரரான சஞ்சு சாம்சன், அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கப் போராடி வருகிறார். சுப்மன் கில்லின் வருகைக்குப் பிறகு, அவரது பேட்டிங் வரிசையும் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நான்காவது டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சனை வெளியே அமர வைத்துவிட்டு, ஜிதேஷ் சர்மாவிற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த போட்டியில், ஜிதேஷ் சர்மா ஃபினிஷர் ரோலில் சிறப்பாகச் செயல்பட்டு, 13 பந்துகளில் 22 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இதன் காரணமாகவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வரும் சுப்மன் கில்லுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கிவிட்டு, அனுபவ வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான சஞ்சு சாம்சனைப் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த போட்டியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த இளம் வீரர் ஹர்ஷித் ராணா, இந்தப் போட்டியில் மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. மெல்போர்னில் நடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் தனது பேட்டிங் திறமையை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
மூன்றாவது போட்டியில் பந்துவீச்சில் அதிக ரன்களை (43) வாரி வழங்கியதுடன், பேட்டிங்கிலும் ஏமாற்றமளித்த சிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்படலாம். ஆல்-ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மற்றொரு ஃபினிஷரான ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.
நான்காவது போட்டியில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும். கடந்த போட்டியில் சுந்தருக்கு ஒரு ஓவர் கூட வழங்கப்படாத நிலையில், இந்தப் போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரைப் பந்துவீச்சில் பயன்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வேகப்பந்து வீச்சுப் பொறுப்பை அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் பகிர்ந்து கொள்வார்கள்.
அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
பெஞ்ச்: சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சிவம் துபே.