மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஐந்து ஓவர்களில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி படுமோசமான நிலைக்குச் சென்றது. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே 3 விக்கெட்களை சாய்த்தார்.
சஞ்சு சம்சனுக்கு டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் எனப் பலரும் கூறிவந்த நிலையில், இந்தப் போட்டியில் அவர் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் சொதப்பினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆசியக் கோப்பை நாயகன் திலக் வர்மா ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. அதில் இரண்டாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனினும், மழையால் போட்டி கைவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங் அதிரடியாக ரன் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன.
டாப் ஆர்டர் சொதப்பல்:
துவக்க வீரர் சுப்மன் கில் மிகவும் நிதானமாக ஆடத் துவங்கினார். 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து மூன்றாம் வரிசையில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருந்தது. தன்னை நிரூபிக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்துவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அவர் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதே நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் மூன்றாவது முறையாக ஆட்டமிழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த திலக் வர்மா அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.
இதை அடுத்து, இந்திய அணி 5 ஓவர்களில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குச் சென்றது. பவர் பிளே முடியும் முன்பே இந்திய அணி 4 விக்கெட் இழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஏற்கனவே, இந்திய ஒருநாள் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என இழந்திருந்தது. தற்போது டி20 தொடரிலும் இந்திய அணி தடுமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.