சிட்னி: இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா, தனிப்பட்ட காரணங்களுக்காகத் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் லெக்-ஸ்பின்னர் தன்வீர் சங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆடம் ஜம்பா மற்றும் அவரது மனைவி ஹாரியட் - தம்பதியினர் தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதால், ஜம்பா இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் அவர் இதே காரணத்திற்காகப் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடிலெய்டில் நடந்த இரண்டாவது போட்டியில் மீண்டும் அணிக்குத் திரும்பிய அவர், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆஸ்திரேலிய டி20 அணியின் முக்கியத் துருப்புச் சீட்டாக விளங்கும் ஜம்பாவின் விலகல், அந்த அணிக்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

ஆடம் ஜம்பாவுக்குப் பதிலாக அணியில் இணைந்துள்ள 23 வயதான இந்திய வம்சாவளி வீரர் தன்வீர் சங்கா, திறமையான இளம் லெக்-ஸ்பின்னர் ஆவார். சிட்னி தண்டர் அணிக்காக பிக் பேஷ் லீக்கில் (BBL) விளையாடி வருகிறார். அவர் இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, 2023ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுகமான போட்டியில் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.
சமீபத்தில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்காக விளையாடிய தொடரில், சங்கா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ஒருநாள் கோப்பைத் தொடரில், நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அடுத்து வரவிருக்கும் ஆஷஸ் தொடரைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியா தனது பந்துவீச்சாளர்களுக்குச் சுழற்சி முறையில் ஓய்வளித்து வருகிறது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார். சீன் அபோட் முதல் மூன்று போட்டிகளுக்குப் பிறகு ஓய்வு பெறுவார்.
அதே சமயம், 2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த 20 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் மஹ்லி பியர்ட்மேன், தொடரின் கடைசி மூன்று போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.