மும்பை : இந்திய டி20 அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவுக்கு உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இன்னும் இரண்டே போட்டிகளில் அவர் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதை மட்டும் செய்தால் 14 வருடமாக முறியடிக்க முடியாமல் இருக்கும் பிரெண்டன் மெக்குல்லம் சாதனையை முறியடித்த வீரராகவும் சூர்யகுமார் யாதவ் புதிய உச்சம் தொடுவார்.

சூர்யகுமார் யாதவ் தற்போது தொடர்ந்து மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்து தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்து இருந்தார்
சர்வதேச டி20யில் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் ஏற்கனவே இடம் பெற்று இருக்கும் நான்கு வீரர்களுடன் ஐந்தாவதாக இணைந்தார் சூர்யகுமார் யாதவ். இதற்கு முன்னர் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையை செய்துள்ளனர். கோலி மூன்று முறை தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து இருக்கிறார். கே எல் ராகுல் இரண்டு முறை இதை செய்து இருக்கிறார். ரோஹித், ஸ்ரேயாஸ் ஐயர் தலா ஒருமுறை இதை செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் அரைசதம் அடித்தால் இந்திய அளவில் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20யில் தொடர்ந்து அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.
மேலும், சர்வதேச அளவில் ஏற்கனவே பல வீரர்கள் நான்கு அரைசதம் அடித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் சூர்யகுமார் யாதவும் இணைவார். அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தால் ஐந்து முறை தொடர்ந்து அரைசதம் அடித்து பிரெண்டன் மெக்குல்லம்-இன் 14 ஆண்டு சாதனையை முறியடிப்பார்.
பிரெண்டன் மெக்குல்லம் 2008 டிசம்பர் முதல் 2009 பிப்ரவரி வரை நான்கு டி20 போட்டிகளில் பங்கேற்று நான்கிலும் அரைசதம் அடித்து இந்த சாதனைப் பட்டியலை முதல் ஆளாக தொடங்கி வைத்தார். அவருக்கு அடுத்து ஐந்து வீரர்கள் தொடர்ந்து நான்கு முறை சர்வதேச டி20யில் அரைசதம் அடித்தனர். ஆனால், யாராலும் அதை முறியடிக்க முடியவில்லை. தற்போது சூர்யகுமார் யாதவுக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை மட்டும் சூர்யகுமார் யாதவ் செய்தால் அந்த சாதனை நீண்ட காலத்துக்கு முறியடிக்க முடியாத சாதனையாக இருக்கக் கூடும்.