விசாகப்பட்டினம் : இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே சாதனை படைத்து இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
அதுவும் இந்திய அணியின் கேப்டன்களாக கடந்த காலங்களில் முத்திரை பதித்த தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால் கூட செய்ய முடியாத அந்த சாதனையை செய்து இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 அணிக்கு கடந்த சில மாதங்களில் கேப்டன்களாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வில் உள்ளனர். பாண்டியா காயத்தில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை.
இந்த நிலையில், இளம் வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டதால் சூர்யகுமார் யாதவ் இந்த டி20 தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
அடுத்து சேஸிங் செய்த இந்திய அணிக்கு கை கொடுத்தது இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான். இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்களும் குவித்தனர். சூர்யகுமார் யாதவ் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்ற நிலையில் அதிக ரன் குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம், இந்திய அளவில் சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
முன்னதாக பும்ரா கடந்த ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக ஆடிய முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அந்த சாதனையை செய்து இருக்கிறார்.
இதுவரை இந்திய டி20 அணிக்கு கேப்டன்களாக வீரேந்தர் சேவாக், தோனி, சுரேஷ் ரெய்னா, அஜின்க்யா ரஹானே, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்களில் பும்ரா, சூர்யகுமார் யாதவை தவிர யாராலும் கேப்டனாக தங்கள் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வெல்ல முடியவில்லை.